தமிழக பட்ஜெட்: 1.5 லட்சம் பெண்களுக்கு 4 ஆடுகள், 12,000 பேருக்கு பசு-சங்கரன்கோவிலில் கோழி பண்ணை!
1 லட்சம் நிலமற்ற ஏழை கிராமப்புற பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த, தலா நான்கு வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த முன்னோடித் திட்டங்கள் வரும் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
2012-2013ம் ஆண்டில் மேலும் 12,000 பயனாளிகளுக்கு கறவைப் பசுக்களும், 1.5 லட்சம் ஏழைப் பெண்களுக்கு தலா நான்கு வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கப்படும்.
இந்த திட்டத்திற்காக, 2012-2013ம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ. 244 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சங்கரன்கோவிலில் கோழிப் பண்ணை:
ஆண்டொன்றிற்கு 1,080 கோடி முட்டைகளை உற்பத்தி செய்து நாட்டின் முட்டை உற்பத்தியில் தமிழகம் 2வது இடத்தை வகிக்கிறது. மேலும் நாட்டின் கோழிகளின் எண்ணிக்கையில் 17.71 சதவீதம் தமிழகத்தில் உள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு வணிக ரீதியில் நாட்டுக்கோழி வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் சிறப்புத் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும். மேலும் நாமக்கல் பகுதியில் இருப்பதை போன்று, சங்கரன்கோவில் மற்றும் விழுப்புரம் பகுதிகளிலும் கறிக்கோழி மற்றும் முட்டைக்கோழி வளர்ப்பினை ஊக்குவித்து, கோழிப் பண்ணைகளை அமைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கால்நடைப் பாராமரிப்புத் துறைக்கு 2010-2011ம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியைக்காட்டிலும் இரு மடங்காக உயர்த்தி 2012-2013ம் ஆண்டில் ரூ. 814.03 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.