நெல்லை-தென்காசி அகல பாதையி்ல் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி
நெல்லை: நெல்லை-தென்காசி வழித்தடத்தில் இன்று அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடந்தது. வரும் மார்ச் 29ம் தேதி ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு மேற்கொள்கிறார்.
நெல்லை-தென்காசி இடையே அகல ரயில் பாதை பணிகள் 2009ம் ஆண்டில் ரூ.229 கோடியில் துவங்கப்பட்டது. இவ்வழித்தடத்தில் 13 பெரிய பாலங்கள், 100க்கும் மேற்பட்ட சிறிய பாலங்கள், ரயில் நிலையங்கள் சீரமைப்பு, சிக்னல், ரயில்வே கேட், பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் கடந்த மாதம் மதுரை கோட்ட மேலாளர் ஜோயல் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ரயில் சோதனை ஓட்டத்தை மேற்கொண்டனர். அப்போது சில குறைபாடுகள் கண்டறியப்பட்டது.
தற்போது அந்த குறைபாடுகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட்டு இன்று காலை அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. மதுரை கோட்ட மேலாளர் (ரயில்வே கட்டுமானம்) அனந்தராமன் தலைமையிலான குழுவினர் நெல்லை-தென்காசி இடையே ரயில் எஞ்சினில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். 100 கி்மீ வேகத்தில் ரயில் என்ஞ்சின் செல்ல அனுமதிக்கப்பட்டது. முன்னதாக எஞ்சினுக்கு ரயில்வே ஊழியர்கள் சிறப்பு பூஜை நடத்தினர். பின்னர் காலை 9.40 மணி அளவில் நெல்லை-தென்காசிக்கு சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வுக்கு பின்னர் மதுரை கோட்ட பொறியாளர் அனந்தராமன் கூறுகையில், இதற்கு முந்தைய சோதனை ஓட்டத்தில் கண்டறியப்பட்ட குறைகளை முழுமையாக நிவர்த்தி செய்யப்பட்டு ரயில் சோதனை ஓட்டம் நடந்துள்ளது. அடுத்த கட்டமாக பெங்ளூரில் இருந்து ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் மிட்டல் வரும் 29ம் தேதி ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதற்காக அவர் வரும் 28ம் தேதி நெல்லை வருகிறார். அவரது ஆய்வறிக்கைக்கு பின்னர் விரைவில் நெல்லை-தென்காசி இடையே ரயில் சேவை தொடங்கும் என்றார்.