மடிக்கணினியை முன்பே கொடுத்திருந்தால் மாணவர்களுக்கு அறிவு மேம்பட்டிருக்கும்- விஜயகாந்த்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க வேண்டும் என்று தற்போது எடுத்து இருக்கும் இந்த நிலையை ஆரம்பத்திலேயே அரசு எடுத்திருக்குமேயானால் இத்தனை விரயங்களையும், தேவையற்ற வேதனைகளையும் தவிர்த்திருக்கலாம்.
இன்று அந்த மக்களை ஏதோ தீவிரவாத இயக்கத்தை ஒடுக்குவது போல் அங்கிங்கெனாதபடி மத்திய, மாநில காவல் துறைகளைக் கொண்டு பயமுறுத்துவதும், அவர்களின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதபடியும் உருவாக்கி இருப்பதும் துரதிர்ஷ்டமாகும்.
அணுமின் நிலையம் பற்றி மக்களுக்கு இருக்கும் அச்சத்தை போக்கி, அந்த பகுதியில் வாழும் மக்களுக்கு செய்ய வேண்டிய சாலை, மருத்துவம், கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வசதிகளை உருவாக்கி கொடுத்த பின்பு கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறந்திருந்தால் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிற பதட்டமான சூழல் உருவாகாமல் தடுத்திருக்க முடியும்.
இன்று தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு கூடங்குளம் அணுமின் நிலையம் உற்பத்தி துவங்கினால் தமிழ்நாடே வெளிச்சமாகி விடும் என்ற போலியான கருத்து மக்களிடம் பரப்பப்படுகிறது. இப்பொழுதே வேலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் மின் உற்பத்திக்கு இன்னும் குறைந்தது ஒரு ஆண்டாவது பிடிக்கும்.
அப்படியே மின் உற்பத்தி ஆரம்பித்தாலும் 1000 மெகாவாட்தான் கிடைக்கும். அதில் தமிழ்நாட்டின் பங்கு 500 மெகாவாட்தான். ஆனால் தமிழ்நாட்டின் பற்றாக்குறையோ 3500 மெகாவாட் ஆகும். மத்திய மந்திரி நாராயணசாமி 1000 மெகாவாட் மின்சாரமும் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் வகையில் முயற்சி மேற்கொள்ளப்படும் என்கிறார். அது நிறைவேறினாலும் கூட தமிழ்நாட்டின் மின்சார பசிக்கு போதுமானதாகாது.
இதேபோல்தான் சென்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசு பல சலுகைகளை அறிவித்தது. ஆனால் இன்று வரை அவற்றில் பெரும்பாலானவைகள் நிறைவேற்றப்படவில்லை. பிளஸ் 2 மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. இப்பொழுது பரீட்சை முடிந்து பல மாணவர்கள் வெளியேறும் நிலையில் உள்ளனர். அனைத்து மாணவர்களுக்கும் மடிக் கணினி வழங்கப்பட்டிருந்தால் அதை பயன்படுத்தி அதன் மூலம் அறிவு மேம்பாடு அடைந்திருப்பார்கள். அது தேர்வுக்கு பயன்பட்டிருக்கும்.
தொலைநோக்கு திட்டம் என்ற பெயரில் 2023-ஆம் ஆண்டு திட்டம் ஒன்று முதல்வரால் வெளியிடப்பட்டுள்ளது. இவைகளில் எல்லாம் வெறும் அறிவிப்புகளாக வருகின்றனவே தவிர, உண்மையில் நடைமுறைப்படுத்தவில்லை. இவையெல்லாம் மக்களை ஏமாற்றும் போக்கையே பிரதிபலிக்கிறது.
அவ்வப்பொழுது அரசின் சார்பில் வெளியிடப்படும் அறிவிப்புகளையும், அவற்றிற்காக கோடிக்கணக்கான ரூபாயில் நிதி ஒதுக்கம் செய்கிறதையும் பார்க்கிற போது பாமர மக்களை பாதிக்கும் பஸ் கட்டணத்தையும், பால் விலையையும் ஏன் உயர்த்தினார்கள் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. அரசிடம் இவ்வளவு பணம் இருக்கிற போது அன்றாடங்காய்ச்சிகள் தலையில் கை வைப்பானேன்? என்று கேட்டுள்ளார் அவர்.