20 போலி பாஸ்போர்ட்டுகளுடன் இந்தியாவிலிருந்து தப்பிய தாவூத் இப்ராகிம்!
கராச்சி: மும்பை நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிம் இந்தியாவிலிருந்து தப்பியபோது 20 போலி பாஸ்போர்ட்டுக்கள வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பையில் நிழல் உலக தாதாவாக திகழ்ந்த தாவூத் இப்ராகிம், தற்போது பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் வசித்து வருகிறான். மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு உள்பட பல்வேறு குற்றங்களுக்காக அவனை மும்பை போலீசார் தேடி வருகிறார்கள்.
20 பாஸ்போர்ட்டுகள்
தாவூத் இப்ராகிம் இந்தியாவில் இருந்து எளிதாக தப்பிச் சென்றது பற்றி விசாரணை நடந்தது. அப்போது தாவூத் இப்ராகிம் 20 போலி பாஸ்போர்ட்டுகள் வைத்திருந்தது தெரிய வந்தது. இதில் 8 பாஸ்போர்ட்டுகள் இந்திய பாஸ்போர்ட்களாகும்.
ஐதராபாத், கொல்கத்தா, பெங்களூர் நகரங்களில் பல்வேறு பெயர்களில் இந்த போலி பாஸ்போர்ட் எடுக்கப்பட்டிருந்தது. தாவூத் இப்ராகிம் மட்டுமின்றி அவனது கும்பலில் உள்ள எல்லாரும் ஏராளமான போலி பாஸ்போர்ட் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மற்ற தாதாக்கள்
சோட்டா ராஜன் 8 போலி பாஸ்போர்ட், சோட்டா ஷகீல் 6 போலி பாஸ்போர்ட் வைத்திருந்தனர். டைகர் மேனன், அயூப் மேனன், அலிமூசா ஆகியோரும் போலி பாஸ்போர்ட் பயன்படுத்தி பல முறை இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்றனர்.
போர்ச்சுக்கல் நாட்டில் மோனிகா பேடியுடன் பிடிபட்ட அபுசலீமும் போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தியே பல நாடுகளுக்கு சென்று வந்தான். இந்த போலி பாஸ்போர்ட்டுகள் பெற உதவியவர்கள் யார், யார் என்று விசாரணை தீவிரமாக்கப்பட்டுள்ளது.