ஏர் இந்தியாவின் நிதி சீரமைப்புத் திட்டத்துக்கு வங்கிகள் ஒப்புதல்
ஆனால் ஏர் இந்தியாவில் கூடுதல் நிதியை முதலீடு செய்வதற்காக மத்திய அமைச்சரவை இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. அமைச்சரவையின் ஒப்புதல் அடுத்த வாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக ஏர் இந்தியா அதிகாரிகள், டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நிதி சீரமைப்புத் திட்டத்தின் கீழ், பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகளிடம் 4 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது ஏர் இந்தியா. முதன்மை மறுசீரப்பு ஒப்பந்தம், நடைமுறை முதலீட்டு வசதி ஒப்பந்தம் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
இதனை நடைமுறைப்படுத்த மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் வழங்கும். அதன் பின்னர் ஏர் இந்தியாவுக்கு நிதி வரும். டெல்லியில் நடைபெற்ற வங்கிகளுடனான ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சியில், மொத்தம் 19 வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதில் ரூ.10,500 கோடி நடைமுறை முதலீடாக அளிக்கப்படுவது மிக முக்கியமான அம்சம். நீண்ட காலக் கடனான இத்தொகைக்கு ஆண்டுக்கு 11 சதவீத வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர மாற்றத்தக்க வகையில் அல்லாத அரசுக் கடன் பத்திரங்கள் மூலம் ரூ.7,400 கோடி நிதி திரட்டப்படவுள்ளது. இவை தவிர ரூ.3,500 கோடி ரொக்கக் கடன் ஒப்பந்தத்தின் மூலம் திரட்டப்படும்.
ரூ 67,520 கோடி கடன்
ஏர் இந்தியாவுக்கு செலுத்த வேண்டிய கடன், பல்வேறு பாக்கித் தொகை ரூ.67,520 கோடி. இதில் ரூ.22 ஆயிரம் கோடி நீண்ட காலக் கடன். கடந்த டிசம்பர் மாதம் வரையில் மொத்தம் ரூ.21,714 கோடி குறுகிய காலக் கடனாக உள்ளது. இதற்கான வட்டியாக ஆண்டுக்கு ரூ.2,600 கோடி செலுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் முதலே, நிதி சீரமைப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. இதற்காக இந்திய ரிசர்வ் வங்கி நிதி ஆலோசகர்களை நியமித்தது. நஷ்டத்தில் உள்ள ஏர் இந்தியாவை மீண்டும் நல்ல நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையில் சீரமைப்புத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்று ஏர் இந்தியா அதிகாரிகள் தெரிவித்தனர்.