சசிகலாவை வெளியேற்றியதும் சேர்த்ததும் நாடகம், சொல்கிறார் சுப்பிரமணியசாமி!
திருநெல்வேலி: அ தி.மு.க.விலிருந்து சசிகலா நீக்கப்பட்டதும் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டதும் அனைத்துமே ஒரு நாடகம் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் சுப்பிரமணியசாமி பேசியதாவது:
சசிகலாவும் ஜெயலலிதாவும் சேர்ந்து நாடாகமாடுகின்றனர். சசிகலாவை ஜெயலலிதா வெளியேற்றியதும் இப்பொழுது சேர்த்துள்ளதும் நாடகம். ஆட்சி மாற்றம் எதற்காக என்பதை தமிழக அரசு புரிந்து கொள்ளாமல் கட்டணங்களை அதிகப்படியாக உயர்த்தி வருகிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழலை வெளியே கொண்டுவந்தது நாங்கள்தான். இதனால்தான் தி.மு.க. ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்தனர். ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழலில் தயாநிதி மாறன் விரைவில் சிறைக்குப் போகப் போகிறார் என்றார்.
இதனிடயே தூத்துக்குடி அருகே வல்ல நாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சுப்பிரமணியசாமி, பிரதமர் மன்மோகன்சிங், சர்க்கஸ் சிங்கம்போல, ரிங்மாஸ்டர் சோனியாவுக்கு கட்டுப்பட்டு அமைதியாக உள்ளார் என்றார்.
மேலும் இந்தியாவிலுள்ள 83 விழுக்காடு இந்துக்களில், 43 விழுக்காடு இந்துக்கள் வாக்களித்தாலே மத்தியில் வலுவான இந்து அரசு அமையும். பசுவதை தடுப்பிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்போகிறேன்,'' என்றார்.