தமிழக பட்ஜெட்டில் வரிவிதிப்பு: கடலை எண்ணெய் விலை உயர்வு
விருதுநகர்: தமிழக பட்ஜெட்டில் எண்ணெய்க்கு மதிப்பு கூட்டு வரியாக 5 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளதால் கடலை எண்ணெய் டின்னுக்கு ரூ.40ம், பாமாயில் டின்னுக்கு ரூ.20ம், நல்லெண்ணெய் டின்னுக்கு ரூ.62ம் உயர்ந்துள்ளது. வத்தல் வரப்பு அதிகரிப்பால் அதன் விலை குவிண்டாலுக்கு ரூ.200 சரிந்துள்ளது.
கடலைப்பருப்பு வரத்து குறைவு, மின்தடை காரணங்களால் கடலை எண்ணெய் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வந்தது. இந்நிலையில் தமிழக பட்ஜெட்டில் ஆண்டுக்கு ரூ.5 கோடிக்குள் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கும் மதிப்பு கூட்டு வரியாக 5 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது. கடலை எண்ணெய் 15 கிலோ ரூ.1690லிருந்து ரூ.1730 ஆகவும், பாமாயில் டின் ரூ.940லிருந்து ரூ.960ஆகவும், நல்லெண்ணெய் டின் ரூ.2248லிருந்து ரூ.2310ஆகவும் விலை உயர்ந்துள்ளது.
ஆந்திரா குண்டூர் வத்தல் மார்க்கெட்டில் திங்கள்கிழமை, வெள்ளிக்கிழைகளில் 60,000 மூட்டைகளும், மற்ற தினங்களில் 40,000 மூட்டைகளும் வருகிறது. குண்டுரில் பதமான வத்தல் குவிண்டால் ரூ.3500ம், தரமான வததல் ரூ.4000 முதல் ரூ.4800 வரையும் விற்கப்படுகிறது. விருதுநகர் வத்தல் மார்க்கெட்டிற்கு திங்கள், வெள்ளிக்கிழமைகளில் 3,000 மூட்டைகளும், மற்ற தினங்களில் 1500 மூட்டைகளும் வரத்து உள்ளது.
சம்பா வத்தல் குவிண்டால் ரூ.4200 முதல் ரூ.4900 வரை விற்றது. தற்போது குவிண்டாலுக்கு ரூ.200 சரிந்து ரூ.4000 முதல் ரூ.4700 வரை விற்பனையானது. குவிண்டால் ரூ.5000 முதல் ரூ.7800 வரை விற்பனையான முண்டு வத்தல் விலை சரிந்து ரூ.5000 முதல் ரூ.6500 வரை விற்பனையானது.