இலங்கை மீது சர்வதேச பொருளாதாரத் தடை: தி.க. தலைவர் கி. வீரமணி வலியுறுத்தல்
கரூர்: இலங்கை மீது சர்வதேச நாடுகள் பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
கரூரில் நடைபெற்ற உரிமை பாதுகாப்பு பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:.
காவிரி விவகாரம்
காவிரி நீர் பிரச்சினையில் கட்சி பாகுபாடின்றி நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்பட வேண்டும். காவிரி நீர் பாயும் தமிழகத்தில் உள்ள நிலங்கள் தற்போது பாலைவனம் ஆகும் நிலை ஏற்பட்டு உள்ளது. காவிரி நீர் பிரச்சினை குறித்து இறுதி தீர்ப்பு வந்த பிறகும், மத்திய அரசால் ஏன் கெஜெட்டில் வெளியிட வில்லை.
முல்லைப் பெரியாறு
அதே போன்று முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் இனி தமிழக மக்கள் ஏமாறமாட்டார்கள். மக்கள் விழித்து கொண்டார்கள். மக்கள் மறதிதான் அரசியல்வாதிகளுக்கு மூலதனம், ஆனால் கறுப்பு சட்டை மறக்காது.
சேதுக் கால்வாய்
அதே போன்று இன்னும் 22 கிலோ மீட்டர் தூரம் சேது சமுத்திர கால்வாய் பணி நடந்தால் அங்கு கப்பல் ஓடும். இந்த பணி நடந்தால் தமிழகம் வளம் பெறும். இன்னொரு நாட்டின் நதி நீர் பங்கீடு 1/2 மணி நேரத்தில் முடிந்து விட்டது. ஆனால் இங்கு உள்ள நதி நீர் பிரச்சினையை முடிக்க முடியவில்லை. காவிரி மற்றும் முல்லை பெரியாறு ஆகிய பிரச்சினைகளுக்கு மிகப் பெரிய போராட்டம் வர வேண்டும். மக்களின் வளர்ச்சி திட்டம் சேது சமுத்திர திட்டம்.
ஈழத் தமிழர்
அதே போன்று இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்கள் வாழ்வுக்கு ஒரே குரல் கொடுப்போம். இலங்கைக்கு உலக பொருளாதார தடை விதிக்க வேண்டும். ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைக்கு ஒரே தீர்வு அங்கு தமிழ் ஈழம் என்ற ஒரே முடிவு. எனவே இலங்கையில் தமிழ் ஈழம் வேண்டும். இதற்காக தமிழ் ஈழ ஆதரவு இயக்கம் உருவாக்க வேண்டும். அதன் மூலம் இலங்கையில் நிரந்தர தீர்வு காணப்படும் என்றார் அவர்