முத்துக்குமரன் மறைவுக்கு தா.பாண்டியன் இரங்கல்: பாட்னாவில் இருந்து விரைகிறார்
பாட்னா: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. முத்துக்குமரன் விபத்தில் பலியானதற்கு அக்கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும்,கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், புதுக்கோட்டை மாட்டச் செயலாளருமான தோழர் எஸ்பி.முத்துக்குமரன் சாலை விபத்தில் மரணமடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
தோழர் முத்துக்குமரன் மின்னல் போலத்தோன்றி ஒளி பரப்பி கரி போல் விழுந்துவிட்டது கட்சிக்கு மிகுந்த வேதனையளிக்கிறது, கவலையளிக்கிறது.
சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நற்பணியாற்றி, நற்பெயர் பெற்றவர் இளம் தோழர் முத்துக்குமரன். அவரது இழப்பால் மிகுந்த துயரமுற்றுள்ள அவரது துணைவியாருக்கும், அவரது மகன் நரேனுக்கும், மகள் நர்மதாவிற்கும் எந்த வார்த்தைகளால் ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை.
அவரது துணைவியாருக்கும் ,மகனுக்கும், மகளுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தோழர் முத்துக்குமரனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கட்சியின் கொடி தமிழகம் முழுவதும் மூன்று தினங்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
அவரது இறுதி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மரியாதை செலுத்துவதற்காக தா.பாண்டியன், ஆர்.நல்லகண்ணு உள்ளிட்ட நாங்கள் பாட்னாவில் இருந்து விமானத்தில் விரைந்து வந்து கொண்டிருக்கிறோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.