தமிழகத்தில் அதிகரிக்கும் வாக்கிங் கொலைகள்... நடக்கவே அஞ்சும் அரசியல் பிரபலங்கள்!
திருச்சியில் வாக்கிங் போனபோது முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடத்திக் கொல்லப்பட்டதாக கூறப்படுவது பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் வாக்கிங் போனபோது கடத்தப்படவில்லை என்றும் முதல் நாள் இரவே கடத்திப் போய் விட்டார்கள் என்றும் புதுச் செய்தி உலவ ஆரம்பித்துள்ளது. இருப்பினும் வாக்கிங்கின்போது கடத்திக் கொல்லப்பட்டார் என்பது அரசியல்வாதிகளிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வாக்கிங் போனபோது கடத்தப்படுவதும், கொலை செய்யப்படுவதும் தமிழகத்திற்குப் புதிதல்ல. ஏற்கனவே இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.
கடந்த 2001ம் ஆண்டு சென்னையில் திமுகவைச் சேர்ந்த பிரமுகர் பாலன் இப்படித்தான் தனது மயிலாப்பூர் வீட்டிலிருந்து வாக்கிங் சென்றோது கடத்தப்பட்டார். பின்னர் அவரைக் கொன்று உடலையும் எரித்து விட்டனர். நீண்ட காலம் கழித்துத்தான் இந்தக் கொலையும், உடல் எரிப்பும் போலீஸாருக்குத் தெரிய வந்தது.
அதேபோல தமிழகத்தை உலுக்கிய இன்னொரு வாக்கிங் படுகொலை மதுரையில் நடந்த தா.கிருட்டிணன் படுகொலை. இது ஒரு அரசியல் படுகொலையாகும். கொலைக்கான காரணம் தமிழகம் அறிந்ததே. திமுகவில் முக்கியப் புள்ளியாக விளங்கியவர் தா.கி. மதுரை அண்ணா நகரில் வசித்து வந்தார்.
கடந்த 2003ம் ஆண்டு இவர் காலையில் வாக்கிங் சென்றபோது கொடூரமாக வெட்டிச் சாய்க்கப்பட்டார். மதுரையை மட்டுமல்லாமல் தமிழகத்தையே உலுக்கிய மிகப் பெரிய படுகொலை இது. உட்கட்சிப் பூசல் காரணமாக நடந்த கொலை இது என்று அப்போது கூறப்பட்டது.
அதேபோல 2004ம் ஆண்டு இன்னொரு முக்கிய திமுக பிரமுகரான ஆலடி அருணாவும் இதேபோலத்தான் வாக்கிங் போனபோது படுகொலை செய்யப்பட்டார்.
தனது நண்பரான ஆசிரியர் பொன்ராஜ் என்பவருடன் தனது சொந்த ஊரில் வாக்கிங் போய்க் கொண்டிருந்தபோது அருணாவை வெட்டிக் கொலை செய்தனர். பொன்ராஜும் படுகொலை செய்யப்பட்டார். இது தொழில்போட்டி காரணமாக நடந்ததாக கூறப்பட்டது.
இப்போது ராமஜெயம் கொலை செய்யப்பட்டுள்ளார். இப்படி அரசியல்பிரமுகர்கள் வாக்கிங் செல்லும்போது குறி வைக்கப்படுவது அதிகரிக்க ஆரம்பித்திருப்பதால் அரசியல்வாதிகளிடையே பெரும் சலசலப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.
உரிய பாதுகாப்பு இல்லாமல், வாக்கிங் போவது உகந்தது அல்ல என்ற முடிவுக்கு அரசியல் பிரமுகர்கள் வரத் தொடங்கியுள்ளனர். மேலும் முடிந்தவரை பாதுகாப்பான சூழலில் வாக்கிங் போகவும் அவர்கள் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
மயிலை பாலன், ஆலடி அருணா, தா.கி, ராமஜெயம் ஆகிய படுகொலைச் சம்பவங்களில் உள்ள வேதனையான ஒற்றுமை என்னவென்றால் நால்வருமே திமுகவினர் என்பதுதான்.