மியான்மரில் 45 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்- ஆங் சூகி வெற்றி முகம்?
இத்தேர்தலில், 15 ஆண்டுகளாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த சூகியும் போட்டியிடுகிறார். ஊரகப் பகுதிகளை உள்ளடக்கிய தொகுதியான காவ்மூ தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.
தேர்தல் முடிவுகள் ஆங் சான் சூகி கட்சிக்கு சாதகமாக அமைந்தால் மியான்மர் மீது மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடை நீங்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
இடைத்தேர்தலை நேர்மையாக நடத்தத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் இடைத்தேர்தல் நேர்மையாக நடக்க வாய்ப்பில்லை. ஆளுங்கட்சி முறைகேட்டில் ஈடுபட திட்டமிட்டுள்ளது என்று ஆங் சான் சூச்சி குற்றம்சுமத்தியுள்ளார்.
மியான்மரில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2010-ல்தான் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ராணுவ ஆதரவு கட்சியே 80 விழுக்காடு இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது.
இந்தியா கண்காணிப்பு
மியான்மர் தேர்தல் நேர்மையாக நடைபெறுகிறதா என்பதை இந்திய தூதர் சேஷாத்ரி மற்றும் அசாம் தேர்தல் ஆணையர் மணீந்தர்சிங், மணிப்பூர் தேர்தல் அதிகாரி லாம்குங்கா ஆகியோர் கண்காணித்து வருகின்றனர்.
6 புதிய கட்சிகள் உட்பட 17 கட்சிகள் இத்தேர்தலில் போட்டியிடுகின்றன.