காவிரி நதி நீர் நடுவர் மன்றத் தலைவர் என்.பி.சிங் ராஜினாமா
டெல்லி: காவிரி நதி நீர் நடுவர் மன்றத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து நீதிபதி என்.பி.சிங் ராஜினாமா செய்துள்ளார். உடல் நிலையைக் காரணம் காட்டி அவர் ராஜினாமா செய்துள்ளார்.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த இவர் கடந்த 1996ம் ஆண்டு இந்த நடுவர் மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த 16 ஆண்டுகளாக இந்த நடுவர் மன்றத் தலைவராக இருந்தார்.
இந்த நடுவர் மன்றம் தான் கடந்த 1991ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி தனது இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதில், தமிழகத்துக்கு கர்நாடகம் ஆண்டுதோறும் 205 டிஎம்சி காவிரி நீரை தர வேண்டும், புதுச்சேரிக்கு 6 டிஎம்சி நீரைத் தர வேண்டும் என்றும் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த உத்தரவை அமலாக்க காவிரி நீர் ஆணையம் 1998ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
இந்த மன்றம் கடந்த 2007ம் ஆண்டிலேயே தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்துவிட்டது. ஆனால், அதை எதிர்த்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதால், நடுவர் மன்றத்தின் காலமும் நீட்டிக்கப்பட்டது.
தனது இறுதி அறிக்கையில், தமிழகத்துக்கு ஆண்டுதோறும் கர்நாடகம் 419 டிஎம்சி நீரையும், புதுச்சேரிக்கு 7 டிஎம்சி நீரையும், கேரளத்துக்கு 30 டிஎம்சி நீரையும் தர வேண்டும் என்று உத்தரவிட்டது. கர்நாடகம் 270 டிஎம்சி நீரை பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதித்தது.
இதை எதிர்த்து தமிழகம், கர்நாடகம் ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் காவிரி நதி நீர் நடுவர் மன்றத் தலைவர் என்.பி.சிங் ராஜினாமா செய்துள்ளார்.