தயாநிதி மாறனிடம் இம்மாத இறுதியில் சிபிஐ மீண்டும் விசாரணை?
டெல்லி: பெரும் தாமதத்துக்குப் பின் ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறனிடம் இம் மாத இறுதியில் சிபிஐ மீண்டும் விசாரணை நடத்தவுள்ளதாகத் தெரிகிறது.
தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, தொழிலதிபர் சிவசங்கரனுக்கு சொந்தமாக இருந்த ஏர்செல் நிறுவனம், 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் கோரி விண்ணப்பித்தது.
ஆனால் லைசென்ஸ் தராமல் தயாநிதி மாறன் இழுத்தடித்ததாகவும், ஏர்செல் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் குழுமத்துக்கு விற்குமாறு கட்டாயப்படுத்தியதாகவும் சிவசங்கரன் குற்றம் சாட்டினார். அதன்படி, மேக்சிஸ் குழுமத்துக்கு ஏர்செல் கைமாறிய பிறகே, 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்சை ஏர்செல்லின் Dishnet Wireless பிரிவுக்கு தயாநிதி மாறன் வழங்கியதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த சிபிஐ கடந்த ஆண்டு செப்டம்பரில் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரரும் சன் டிவி அதிபருமான கலாநிதி மாறன் ஆகியோரிடம் விசாரணை நடத்தியது.
இந்த விவகாரத்தில் சிபிஐ நடத்திய விசாரணையில், ஏர்செல் நிறுவனத்தை வாங்கிய மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் தனது அஸ்ட்ரோ நெட்வோர்க் என்ற நிறுவனத்தின் மூலமாக சன் டிவியின், சன் டைரக்ட் பிரிவில் சுமார் ரூ. 400 கோடியளவுக்கு முதலீடு செய்ததும் தெரிய வந்தது.
மேக்சிஸ் நிறுவனத்தின் செயல் அதிகாரியான ரால்ப் மார்ஷல் 2005-2006ம் ஆண்டில் 3 முறை தயாநிதியை சந்தித்ததும் உறுதியாகியுள்ளது.
இந்த விவகாரத்தில் மேலும் பணம் கைமாறியிருக்கலாம் என்று கருதும் சிபிஐ இது குறித்து பல்வேறு நாடுகளின் உதவியைக் கோரியுள்ளது. இந் நிலையில், கடந்த 7 மாதங்களில் சேகரிக்கப்பட்டுள்ள ஆதாரங்களை அடிப்படையாக வைத்து இம்மாத இறுதியில் தயாநிதி மாறனிடம் சிபிஐ மீண்டும் விசாரணை நடத்தும் என்று தெரிகிறது.