முள்ளியவாய்க்காலில் பல ஆயிரம் தமிழர்களின் பிணங்கள்-இந்தியக் குழு ஆராய ஈழ எம்.பி. கோரிக்கை
மதுரையில் வக்கீல்கள் சங்கம், தமிழ் வக்கீல்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் ஈழத் தமிழர்களின் இன்றைய நிலை என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று நடந்தது. அதில் கலந்து கொண்டார் ஸ்ரீதரன்.
அப்போது அவர் பேசுகையில்,
இலங்கை தமிழர் விஷயத்தில் மனித உரிமை மீறப்பட்டுள்ளது. ஏராளமானோர் காணாமல் போய் உள்ளனர். பள்ளி சென்ற குழந்தைகள் வீடு திரும்பவில்லை. பள்ளி சென்ற குழந்தைகள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பெற்றோர் இல்லை. இதுபோன்று பல கொடுமைகளை இலங்கை அரசு நடத்தி உள்ளது.
இலங்கையில் தமிழர்கள் வசித்த பகுதியில் இருந்த சிவன் கோவிலை இடித்து விட்டு புத்தர் கோவிலை கட்டி வருகிறார்கள். இலங்கை செட்டிகுளம் பகுதியில் 40 ஆயிரம் தமிழர்கள் இருக்கிறார்கள். முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழர்களை மீண்டும் குடி அமர்த்த இலங்கை அரசு மறுத்து வருகிறது. கொல்லப்பட்ட பல ஆயிரக்கணக்கான தமிழர்களின் உடல்கள் அங்கு புதைக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு கன்னி வெடி இருப்பதாக கூறி குடியமர்த்த மறுத்து வருகிறார்கள். ஆனால் அங்கு எதுவும் கிடையாது.
இந்திய அரசு சார்பில் இலங்கைக்கு செல்ல உள்ள குழு இலங்கை அரசு, சிங்கள ராணுவம் கூட்டி செல்லும் இடங்களுக்கு மட்டும் செல்லக்கூடாது. கிளிநொச்சி, முள்ளிவாய்க்கால் பகுதிகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.
ஐ.நா தீர்மானத்தை இலங்கை அரசு நிறைவேற்றும் என்பது கேள்விக்குறியான விஷயம்தான். இலங்கை அரசு அமைத்துள்ள நல்லிணக்க ஆணையம் அளித்த பரிந்துரையைதான் ஐ.நா தீர்மானமாக நிறைவேற்றி உள்ளது. இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும்.
தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தினரை அப்புறப்படுத்த வேண்டும். இலங்கை அரசின் போர்க்குற்றம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும். ஐ.நா தீர்மானத்தை இந்தியா ஆதரித்து இருப்பதன் மூலம் இந்திய வெளியுறவு கொள்கையில் மாற்றம் தெரிகிறது என்றார் அவர்.
விடுதலைப் புலிகள் பிரபாகரன் குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், அவர் மீண்டும் வருவார், மீண்டு வருவார் என்றார் ஸ்ரீதரன்.