தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா தடுப்பணை கட்ட முதல்வர் விடமாட்டார்: கே.வி. ராமலிங்கம்
சென்னை: தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு தடுப்பணை கட்ட முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்க மாட்டார் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்த பிறகு கோபிநாத் (காங்கிரஸ்), டெல்லி பாபு (சிபிஎம்), ராமச்சந்திரன் (சிபிஐ), கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) ஆகியோர் சேர்ந்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தனர்.
அப்போது அவர்கள் பேசியதாவது,
கர்நாடக மாநிலம் நந்தி மலையில் தோன்றும் தென்பெண்ணை ஆற்றால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் பயனடைந்து வருகின்றன. இந்நிலையில் தென்பெண்ணை ஆற்றிக் குறுக்கே தடுப்பணை கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. அவ்வாறு தடுப்பணை கட்டப்பட்டால் 4 மாவட்டங்களும் பாதிக்கப்படும். எனவே, தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றனர்.
அதற்கு அமைச்சர். கே.வி. ராமலிங்கம் பதில் அளித்து கூறுகையில்,
ஏற்கனவே போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி தமிழக அரசின் முன் அனுமதி இல்லாமல் கர்நாடக அரசால் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முடியாது. அவ்வாறு ஏதாவது திட்டம் இருந்தாலும் அதை அவர்கள் தமிழக அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இது தொடர்பாக அம்மாநில அரசுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளர் மூலம் மீண்டும் கடிதம் அனுப்பி இது குறித்து கண்காணிக்க குழு ஒன்று அமைக்கப்படும்.
தமிழகத்தின் உரிமையை முதல்வர் ஒருநாளும் விட்டுக் கொடுக்கமாட்டார் என்றார்.