மாமல்லபுரத்தில் இரவில் கடல் உள்வாங்கியது: மக்கள் பீதி
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் நேற்று இரவு 7 மணி அளவில் கடல் நீர் சுமார் 50 மீட்டருக்கு உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தோனேசியாவில் நேற்று மதியம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிற்பகல் 2 மணி அளவில் நில அதிர்வு உணரப்பட்டது. இதையடுத்து தமிழகத்தை சுனாமி தாக்கலாம் என்று எச்சரிக்கை விடப்பட்டது. சென்னையை மாலை 5 மணிக்கு சுனாமி தாக்கும் என்று கூறப்பட்டது. சில மணி நேரங்களில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
முன்னதாக சுனாமி எச்சரிக்கை விடப்பட்டவுடன் மாமல்லபுரத்தில் மாவட்ட எஸ்.பி. மனோகரன் மேற்பார்வையில் போலீசார் ஒலிபெருக்கி மூலம் அங்கிருந்த சுற்றுலா பயணிகளை வெளியேற்றினர். கடற்கரையில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.
இந்நிலையில் வெண்புருவம்- கொத்தளமேடு பகுதியில் நேற்றிரவு 7 மணி அளவில் கடல் நீர் சுமார் 50 மீட்டருக்கு உள்வாங்கியது. இதனால் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது தவிர குமரி, நாகை, நெல்லை மாவட்டங்களில் குளங்கள் பொங்கியதால் மக்கள் பீதியடைந்தனர்.