லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரம்: ராணுவ தளபதியிடம் விளக்கம் கேட்கிறது சி.பி.ஐ.
டெல்லி: ராணுவத்துக்கு தரம் குறைந்த வாகனங்களை வாங்குவதற்காக ரூ14 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்பட்ட வழக்கில் ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங்கிடம் விளக்கம் கேட்க சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது.
தமக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக வி.கே.சிங் வெளியிட்ட தகவலால் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சி.பி.ஐக்கும் எழுத்துப்பூர்வமாக வி.கே.சிங் புகார் மனுவும் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் வி.கே.சிங்கிடம் கூடுதல் விளக்கம் கேட்க சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. இதற்காக வி.கே.சிங்குக்கு வாய்ப்பான ஒரு நாளைக் கோரவும் சி.பி.ஐ. திட்டமிட்டிருக்கிறது. ஆனால் தலைநகரில் வி.கே.சிங் இல்லாத நிலையில் அவரை சி.பிஐயால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. விரைவில் வி.கே.சிங்கிடம் சி.பி.ஐ. விளக்கம் பெறக்கூடும் எனத் தெரிகிறது.