டெல்லி கார் குண்டுவெடிப்பு விசாரணை: இந்தியாவுக்கு ஈரான் அழைப்பு
டெல்லி: டெல்லியில் இஸ்ரேலிய தூதரக கார் குண்டுவெடிப்பு மீதான தாக்குதல் குறித்து விசாரணை நடத்த வருமாறு இந்தியாவுக்கு ஈரான் அழைப்பு விடுத்துள்ளது.
டெல்லியில் பிப்ரவரி 13-ந் தேதி இஸ்ரேல் தூதரக காரை காந்த ஸ்டிக்கர் மூலம் குண்டுவைத்து தகர்த்த சம்பவத்தில் 4 ஈரானியர்களுக்கு தொடர்பிருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து இண்டர்போல் உதவியுடன் அவர்களுக்கு ரெட் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் ஈரான் இது தொடர்பாக எதுவித கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வந்தது.
அதே நேரத்தில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பு கோரி ஈரான், மலேசியா, தாய்லாந்து நாடுகளுக்கும் டெல்லி போலீஸ் கடிதம் அனுப்பியிருந்தது.
இந்நிலையில் ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு இஸ்ரேலிய கார் குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்த வருமாறு டெல்லி போலீஸாருக்கு ஈரான் அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
ஈரானின் அணுவிஞ்ஞானிகளின் தொடர் படுகொலைக்கு பழிவாங்கும் விதமாக டெல்லி, பாங்காங், ஜார்ஜியாவில் இஸ்ரேலிய தூதரகங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.