நாடு முழுவதும் பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்!
டெல்லியில்...
தலைநகர் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேக்தர் சிலைக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் மலர் தூவி மரியாதை செலுத்தினார். துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காங்தி ஆகியோரும் அம்பேக்தர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மத்திய அமைச்சர்கள் முகுல்வாஸ்னிக், பவன்குமார் பன்சால் மற்றும் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி ஆகியோர் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினர்.
தலைவர்கள் மட்டுமின்றி நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களும் அம்பேத்கர் சிலைக்கு மலர்தூவி சிறப்பித்தனர்.
மராட்டியத்தில்...
மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் சிவாஜி பூங்காவில் அமைந்துள்ள அம்பேத்கர் நினைவிடத்தில் முதலமைச்சர் பிரித்விராஜ் சவான் மலர்தூவி மரியாதை செலுத்தினார். துணை முதல்வர் அஜித் பவார், மாநில காங்கிரஸ் தலைவர் மனிக்ரோவ் தாக்கரே, சிவசேனா தலைவர் தலைவர் சுபாஷ் தேசாய் உள்ளிட்ட பலரும் அம்பேத்கர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
இதேபோல் நாசிக், புனே, நாக்பூர் ஆகிய இடங்களிலும் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மும்பை மாநகராட்சி சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
வரலாறு...
மராட்டிய மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அவர், இளம் வயதில் பல்வேறு துன்ப, துயரங்களை அனுபவித்தார்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து பல்வேறு பொருளாதாரத் தடைகளைக் கடந்து வெளிநாட்டில் படித்து நாட்டின் அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் முதன்மைப் பங்காற்றியதுடன் இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு வழிகாட்டியாக, விடிவெள்ளியாக இன்றும் திகழ்பவர் அம்பேதகர்.
"பாதாளம் வரை அழுத்த முயன்ற பல்லாயிரம் கரங்களை சுட்டுப்பொசுக்கி சுடர்விட்ட அறிவுச் சூரியன்.. பேரறிஞர்.. சாதியம் ஓய்வதில்லை, ஒவ்வொரு கட்டத்திலும் வேறு வேறு வடிவங்களில் கொடுமையைக் கட்டவிழ்த்துக் கொண்டே இருக்கும் என்பதை கணித்து தீர்வெழுதிய மாமேதை" என்ற போற்றுதலுக்குரியவர் அம்பேத்கர்.
சட்டம், பொருளாதாரம், அரசியல் தத்துவம், வரலாறு, சமூகவியல் என அனைத்திலும் முதுகலைப் படிப்பும், டாக்டர் பட்டங்களையும் பெற்றவர். குலத்தால் தாழ்ந்தவன் என்ற சொல்லைப் போக்கும் மாமந்திரம் கல்விதான் என்ற பெரும் உண்மையை தன் வாழ்க்கை மூலம் உணர்த்தியவர் அம்பேத்கர்தான்.
கற்பி - ஒன்று சேர் - கலகம் செய் என்பது அவர் கற்பித்த நெறி.
"ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல; ஆடுகளாக இருக்க வேண்டாம்; சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழுமின்," என்பது வாழ்க்கை முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர் சொல்லித் தந்த வேதம்.
தலித், மகர் என்ற வரையறைக்கப்பால், ஒவ்வொரு இளைஞனுக்கும் வழிகாட்டியாகத் திகழும் 'பாரத் ரத்னா' அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளான இன்று அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.