100 பவுன் நகைகள் கடத்தல்: இலங்கை மாமியாருடன் மருமகள் கைது
சென்னை: கொழும்பிலிருந்து 100 பவுன் தங்க நகைகளைக் கடத்தியதாக திரிகோணமலையைச் சேர்ந்த அம்மா பேகம் மற்றும் அவரது மருகள் பாத்திமா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை கொழும்பிலிருந்து வந்த விமான பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக இருந்த திரிகோணமலையைச் சேர்ந்த அம்மா பேகம் மற்றும் அவரது மருமகள் பாத்திமா ஆகியோரிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இச்சோதனையின் போது 2 மாதங்களுக்கு முன்பு தமக்குத் திருமணம் நடந்ததாகவும் கணவர் அப்துல்காதர் மற்றும் மாமியார் அம்மாபேகத்துடன் தமிழகத்துக்கு சுற்றுலாவுக்கு வந்துள்ளதாகவும் பாத்திமா கூறினார்.
இருப்பினும் அவர்கள் அணிந்திருந்த 100 பவுன் மதிப்பிலான 12 தங்கக் காப்புகள் குறித்து துருவி துருவி கேள்வி கேட்கப்பட்டது. ஒரு கட்டத்தில் மாமியாரும் மருமகளும் கடத்தல்காரர்கள் கொடுத்தனுப்பியவைதான் என்று ஒப்புக் கொண்டனர்.
இதற்காக அவர்களுக்கு விமான டிக்கெட் போக தலா ரூ.3 ஆயிரம் தருவதாக கடத்தல்காரர்கள் கூறியதாகவும் தெரியவந்தது. இதையடுத்து தங்கக் காப்புகளை வைத்திருந்த மாமியார், மருமகளை அதிகாரிகள் கைது செய்தனர். அப்துல்காதரை எச்சரித்து திருப்பி அனுப்பி வைத்தனர்.