நெல்லை: அகஸ்தியர் அருவி பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் அங்கு குளிக்கச் சென்ற போலீசார் ஓட்டம் பிடித்தனர்.
நெல்லை மாவட்டம் பாபநாசம் முண்டத்துறை புலிகள் காப்பகத்தில் புலிகள், யானை, சிறுத்தை, மிளா, வரையாடு, கரடி, செந்நாய், சிங்கவால் குரங்கு, மந்தி, மரஅணில், மரநாய் உள்ளிட்ட அரிய வகை விலங்குகளும், அரிய வகை மூலிகைகளும் சுமார் 935 கிமீ பரப்பரளவில் உள்ளன. கோடைகாலத்தில் சிறுத்தைகள் மலையடிவார பகுதியில் தண்ணீர் மற்றும் உணவுக்காக வருவது வழக்கம்.
பொதிகையடி அனவன் குடியிருப்பு, காசிகிந்தர் தோப்பு, செட்டிமேடு உள்ளிட்ட இடங்களில் சிறுத்தைகள் நாய்களை இழுத்துச் செல்லும். ஆடு, மாடுகளை கடித்து குதறும். இந்நிலையில் நேற்று சித்திரை திருவிழாவை முன்னிட்டு பாபநாசம் அகஸ்தியர் அருவி, பாணதீர்த்த அருவி பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. நேற்று முன்தினம் மாலை சுமார் 6.30 மணி அளவில் அகஸ்தியர் அருவியில் பாதுகாப்புக்காக நி்ன்ற போலீசார் குளிக்க வந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் சிறுத்தை ஒன்று அப்பகுதிக்கு வந்தது.
இதை கண்ட போலீசார் அலறியடித்துக் கொண்டு ஓடினர். பின்னர் அந்த சிறுத்தை வேறு பகுதிக்கு சென்றுவிட்டது. அகஸ்தியர் அருவி பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் சுற்றுலா பயணிகள் அச்சத்தில் உள்ளனர்.


















