5 ஆண்டுகளில் உத்தர்காண்ட் எல்லையில் 37 முறை ஊடுருவிய சீனா
டெல்லி: உத்தர்காண்ட் மாநிலத்தில் 5 ஆண்டுகளில் 37 முறை சீனா ஊடுருவலை நிகழ்த்தியிருப்பதாக அம்மாநில முதல்வர் விஜய் பகுகுணா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான முதல்வர்கள் மாநாட்டில் அவர் பேசியதாவது:
சீனாவின் அத்துமீறல்
உத்தர்காண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் உள்ள பரஹோதி பகுதி மீது சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அப்பகுதி தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்று அடிக்கடி கூறி வருகிறது. அப்பகுதி மீது உரிமை கொண்டாடுவதுடன் மட்டுமல்லாமல் அந்நாட்டு படைகள் அடிக்கடி ஊடுருவுகின்றன.
2006-ல் 6 முறை, 2007-ல் 2 முறை, 2008-ல் 10 முறை, 2009-ல் 11 முறை, 2010-ல் 5 முறை, 2011-ல் 3 முறை இந்திய எல்லைக்குள் சீனப் படை ஊடுருவியுள்ளது.
சீன எல்லையை ஒட்டிய பகுதியில் பாதுகாப்புப் படை வீரர்கள் ரோந்து செல்லும் வகையில் 12 சாலைகளை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. ஆனால் இந்தப் பணிகளை மேற்கொள்வதற்கு மத்திய வனத்துறையிடம் இருந்து இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை.
இதனால் சாலை அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் எல்லையோரத்தை தீவிரமாகக் கண்காணிக்க முடியாத சூழல் உள்ளது. ஆனால் எல்லைப் பகுதியில் நவீனமான சாலைகளை சீனா ஏற்படுத்தியுள்ளது. இதை சாலை அமைக்கும் போது மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
நேபாள மாவோயிஸ்டுகள்
மாநிலத்தில் சீனப் படைகளால் ஒருபுறம் அச்சுறுத்தல் என்றால் மாவோயிஸ்டுகளால் மற்றொருபுறம் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் நேபாள எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் முகாமிட்டுள்ள இளம் கம்யூனிஸ்ட் லீக் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஊடுருவல் அச்சுறுதல் விடுத்து வருகின்றனர். மாநிலத்தின் பிதோரகார் மாவட்டத்தின் கலபானி பகுதி தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் அவர்கள் கூறி வருகின்றனர் என்றார் அவர்