பஞ்சாப்-3-வதும் பெண் குழந்தை: மனைவியின் கழுத்தை நெறித்துக் கொன்ற கணவன்
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் மூன்றாவது தடவையும் பெண் குழந்தை பெற்ற பெண்ணை அவரது கணவர் கழுத்தை நெறித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தரசஸைச் சேர்ந்தவர் பரம்ஜித் கௌர்(35). அவரது கணவர் நிஷான் சிங். அவர்களுக்கு ஏற்கனவே பிறந்த 2 குழந்தைகளும் பெண் என்பதால் நிஷான் வருத்தத்தில் இருந்தார். இந்நிலையில் பரம்ஜித் மீண்டும் கர்ப்பமானார். இந்த முறையாவது ஆண் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்த்த நிஷான் மூன்றாவது தடவையும் பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரம் அடைந்தார். இதையடுத்து அவர் தனது மனைவியை கழுத்தை நெறித்துக் கொலை செய்தார்.
இது குறித்து பரம்ஜித்தின் சகோதரர் சுர்ஜித் சிங் கூறுகையில்,
பெண் குழந்தை விஷயமாக அவர்கள் அடிக்கடி சண்டைபோட்டுக் கொண்டனர். பஞ்சாயத்து உறுப்பினர்களும் அவர்களுக்கு எடுத்துச் சொல்ல முயன்றனர். நிஷானுக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் பிறந்தது பெண் குழந்தைகள். பெண் குழந்தையும் கடவுளின் பரிசு என்பதை அவர் உணரவில்லை. அதை புரிந்துகொள்ளாமல் எனது சகோதரியை கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டார். இது குறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளோம். சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றார்.
இந்த கொலை குறித்து விசாரணை அதிகாரி மன்ஜித் சிங் கூறுகையில்,
நிஷானுக்கும், பரம்ஜித்துக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. அவர் எப்பொழுதுமே தனது மனைவியை சந்தேகப்பட்டு வந்துள்ளார். மனைவியைக் கொன்ற குற்றத்திற்காக நாங்கள் அவரை கைது செய்துள்ளோம் என்றார்.