இலங்கைக்கு தி.மு.க. எம்பிக்களை அனுப்பாதது கடமை தவறிய செயல்: பா.ஜ.க. குற்றச்சாட்டு
மதுரை: இலங்கைக்கு சென்றுள்ள இந்திய எம்.பிக்கள் குழுவில் திமுக இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டது கடமை தவறிய செயல் என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் சாடியுள்ளார்.
இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
இலங்கை சென்றுள்ள எம்.பி.க்கள் குழுவில் தி.மு.க. இடம் பெறாது என முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்ததுள்ளார். இது கடமை தவறிய செயலாகும்.
இலங்கை செல்லும் முன்பாக சுஸ்மா ஸ்வராஜை நேரில் சந்தித்து இலங்கையில் தமிழர்களுக்கு என்ன தேவை என்பது குறித்து விரிவாக விளக்கியிருக்கிறேன்.
முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்ட தமிழர்களுக்கு ஐம்பதாயிரம் வீடுகள் கட்டித்தரப்படும் என இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் உறுதியளித்தபடி வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை.
இதேபோல் இலங்கைத் தமிழர் புனர்வாழ்வுக்காக மத்திய அரசு ரூ500 கோடி வழங்கியது. அந்த பணம் முறையாக தமிழர்களுக்காகத்தான் செலவிடப்பட்டதா என்பது குறித்தும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் சுஸ்மாவிடம் கேட்டுக்கொண்டேன் என்றார் அவர்.