தை முதல்நாள்தான் தமிழர்களுக்கு உண்மையான புத்தாண்டு: க. அன்பழகன்
வேலூர்: தை முதல்நாள்தான் தமிழர்களுக்கு உண்மையான புத்தாண்டு நாள் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் க. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் கட்டண உயர்வு நடவடிக்கைகளைக் கண்டித்து வேலூர் மாவட்டம் வாலஜாபேட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் க. அன்பழகன் பேசியதாவது:
தமிழகத்தில், மின் கட்டணம், விலைவாசி உயர்வை கண்டித்து வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை பஸ் நிலையத்தில் நகர திமுக சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் கலந்து கொண்டு பேசியதாவது
தமிழகத்தில் உள்ள அதிமுக ஆட்சி தமிழனுக்கும், தமிழ் நலனுக்கும் எதிரான ஆட்சி. தமிழ்ப் புத்தாண்டை தான்தோன்றித்தனமாக மாற்றியுள்ளார்கள். தை முதல் நாள் தான் தமிழனுக்கு உண்மையான புத்தாண்டு ஆகும்.
தமிழகத்தில், அதிமுக ஆட்சிக்கு வந்தது முதல் பால் விலை, பேருந்து கட்டணம் , மின் கட்டணம் ஆகியவற்றை அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் மின் கட்டணத்தை ஒரு விழுக்காடு மட்டுமே குறைத்துள்ளனர். மேலும் அண்ணா நூலகம், சமச்சீர் கல்வி போன்றவற்றில் அரசின் நடவடிக்கையானது மாணவர்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் மனதை புண்படுத்தியுள்ளது.
இந்த ஆட்சியில் தொடரும் அலங்கோலங்களை மக்கள் பார்த்துக் கொண்டுதான் உள்ளனர். கருணாநிதி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும் போது இத்தகைய குளறுபடிகள் அனைத்தும் சரிசெய்யப்படும் என்றார் அவர்.