தஞ்சாவூர்: முதல்வர் ஜெயலலிதாவின் 'மீண்டும் தோழி' சசிகலாவின் கணவர் நடாஜன் மீது 6வது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடராஜனுக்கு 3 வழக்குகளில் ஜாமீன் கிடைத்துள்ளது. மீதமுள்ள இரு வழக்குகளில் ஜாமீன் கிடைக்காத நிலையில் அவர் தொடர்ந்து சிறையிலேயே இருந்து வருகிறார்.
இந் நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் அன்புநகரைச் சேர்ந்த ரங்கராஜன் என்பவர் தஞ்சாவுர் தாலுகா காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில்,
விளார் கிராமத்தில் எனக்குச் சொந்தமான இடத்தில் இருந்த மரங்களை பொக்லைன் மூலம் நடராஜனும், அவரது சகோதரரும் அகற்றினர். அதனைத் தட்டிக்கேட்ட எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர் என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து இது குறித்து தஞ்சாவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் நடராஜன் சிறையில் இருந்தபடியே கைது செய்யப்படவுள்ளார்.





















