என் கணவரை பாதுகாப்பாக விடுவியுங்கள்: கடத்தப்பட்ட கலெக்டரின் மனைவி ஆஷா கோரிக்கை
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவரான அலெக்ஸ் பால் மேனனைக் கடத்திய மாவோயிஸ்டுகளிடமிருந்து எதுவித தகவலும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. அவரை எந்தக் கோரிக்கைகாக மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றனர் என்பது குறித்தும் தெரியவில்லை.
மனைவி கோரிக்கை
இந்நிலையில் மேனனின் மனைவி புஷ்பபாக்கியம், தமது கணவரை பாதுகாப்பாக விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் தமது கணவர் ஆஸ்துமா நோயாளி என்பதால் அவர் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டிய சூழலில் விடுதலை செய்யுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே தமது மகனை சில நாட்களுக்கு முன்புதான் தாம் சந்தித்துவிட்டு வந்ததாக சென்னையில் உள்ள அவரது தந்தை வரதாஸ் கூறியுள்ளார்.
ஹிட்லிஸ்டில்தான் இருந்தார்..
கேரளாவின் புகழ்பெற்ற வி.கே. கிருஷ்ணமேனனின் மீதான மரியாதையால் தம் மகனின் பெயரில் மேனனை சேர்த்தேன் என்றும் மாவோயிஸ்டுகளிடமிருந்து பழங்குடி மக்களை பாதுகாத்து வரும் பணியில் பால்மேனன் ஈடுபட்டிருந்தார் என்றும் அவர் கூறினார். தமது மகன் மாவோயிஸ்டுகளின் ஹிட் லிஸ்டில் இருந்தது தமது குடும்பத்தினருக்குத் தெரியும் என்றும் வரதாஸ் தெரிவித்துள்ளார்.
"சுக்மா மாவட்டத்தில் உயர் அதிகாரிகள் கடத்தப்படக் கூடிய சூழல் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் பாதுகாவலர்களுடன் மட்டும் வெளியே செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தார். அதனால் பால்மேனன் மிகவும் கவனமாக இருந்தார். இருப்பினும் அவர் கடத்தப்பட்டிருக்கிறது கவலையளிக்கிறது" என்று அவரது மாமனார் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
கடை அடைப்பு
ஆட்சியர் கடத்தப்பட்டதைக் கண்டித்து சுக்மா மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மாவோயிஸ்டுகளின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முழு அடைப்புப் போராட்டத்தை நடத்துவதாக சுக்மா மாவட்ட வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் மாவோயிஸ்டுகளிடமிருந்து தகவல் எதுவும் வராத நிலையில் முதல்வர் ராமன்சிங் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்..