நேர்மையாக, திறமையாக முடிவெடுங்க.. : ஆட்சிப் பணியாளர்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங் அறிவுரை
டெல்லியில் நடைபெற்ற ஆட்சிப்பணியாளர்கள் நாள் விழாவில் அவர் பேசியதாவது:
ஆட்சிப்பணியாளர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரின் ஒழுக்க நெறி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல இன்று இல்லை என்ற ஒரு கருத்து வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆட்சிப்பணியாளர்களைப் பொறுத்தமட்டில் வெளியில் இருந்து வருகிற நிர்ப்பந்தங்களுக்கு பலியாகிற நிலை அதிகமாக உள்ளது. இந்த கருத்து மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம். ஆனால் இதில் உண்மை இருப்பதாக நான் கருதுகிறேன்.
ஆட்சிப்பணியாளர்கள் எடுக்கிற முடிவுகள் இயல்பிலேயே நேர்மையானதாக, பாரபட்சமற்றதாக, வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்ததாக, நாட்டின் நலனையொட்டி எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அரசியல் தலைமைகளால் அவர்களின் முடிவுகள், அறிவுரைகள் பாதிப்புக்கு ஆளாகக்கூடாது. நேர்மையான, திறமையான ஆட்சிப்பணியாளர்கள் முடிவுகள் எடுக்கும்போது சில சமயங்களில் தவறு நடந்துவிடும் வாய்ப்பு உள்ளது. அப்படி நிகழ்ந்தால், அவர்களை காப்பதில் அரசு உறுதியாக உள்ளது. முடிவுகள் எடுக்காத ஆட்சிப்பணியாளர்கள் எப்போதுமே பாதுகாப்பாக இருந்து விட முடியும். ஆனால் ஒரு நாளின் முடிவில் அவர்கள் நமது சமூகத்துக்கு, இந்த நாட்டுக்கு எந்தவொரு பங்களிப்பையும் செய்து விட முடியாது.
ஊழலை ஒழிக்க கடுமையான, உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பொது வாழ்வில் ஊழலை ஒழிப்பதற்கு ஏற்ற விதத்தில் கடந்த ஓராண்டாக சட்ட அமைப்புக்களை வலுப்படுத்துவதிலும், நிர்வாக நடைமுறைகளை புனரமைப்பதிலும் மத்திய அரசு நல்ல முன்னேற்றத்தை கண்டிருக்கிறது. பொதுவாக ஆட்சிப்பணியாளர்கள் புதிய தொழில்நுட்பத்துக்கு ஏற்ற வகையில், காரியங்களை ஆற்றுவதில் புதிய வழிகளை காணுகிற விதத்தில், ஆட்சிப்பணியாளர்கள் தங்கள் முயற்சிகளை இரு மடங்காக உயர்த்த வேண்டும் என்றார் அவர்.