கடத்தப்பட்ட கலெக்டர் குறித்து துப்பு கிடைத்துள்ளது-சட்டிஸ்கர் போலீஸ்
ராய்ப்பூர்: மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டுள்ள கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் குறித்து சிலமுக்கியத் துப்பு கிடைத்துள்ளதாக சட்டிஸ்கர் காவல்துறை அறிவித்துள்ளது.
இருப்பினும் இன்னும் கலெக்டரை நேரடியாக காவல்துறையினரால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நக்சலைட் எதிர்ப்புப் பிரிவு ஏடிஜிபி ராம் நிவாஸ் கூறுகையில், சில முக்கியத் துப்பு கிடைத்துள்ளது. இருப்பினும் பாதுகாப்பு காரணங்களுக்காக அவற்றைப் பகிரங்கப்படுத்த முடியாது.
கலெக்டர் மேனன் பங்கேற்ற கிராம சூரஜ் அபியான்நிகழ்ச்சியின்போது பங்கேற்ற அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதிலிருந்து சில தகவல்கள் கிடைத்துள்ளன. மொத்தம் 50 நக்சலைட்கள் சம்பவ இடத்திற்கு வந்ததாகவும், அவர்கள் கலெக்டரின் பாதுகாவலர்கள் இருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு கலெக்டரை தூக்கிச் சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடத்தல்காரர்களில் பெண்களும் கணிசமான அளவில் இருந்துள்ளனர். அவர்களில் 20 பேர் ஆயுதங்களுடன் இருந்துள்ளனர்.
இதுவரை பணம் கேட்டு நக்சலைட்களிடமிருந்து எந்தக் கோரிக்கையும் வரவில்லை என்றார் அவர்.
எஸ்.எம்.எஸ். வந்ததா?
இதற்கிடையே தான் பத்திரமாக இருப்பதாக கூறி மேனனிடமிருந்து அவரது மனைவிக்கு எஸ்.எம்.எஸ். ஒன்று வந்ததாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.