சேது சமுத்திரத் திட்டத்தில் மத்திய அரசு அக்கறையற்ற நிலைப்பாடு: மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்
சென்னை: சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான மத்திய அரசின் அக்கறையற்ற நிலைப்பாட்டுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ் கட்சியின் தமிழ் மாநிலக் குழுச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சேது சமுத்திரத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இதற்குப் பதிலாக உச்ச நீதிமன்றமே இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. இது சேதுசமுத்திரத் திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசின் அக்கறையற்ற போக்கையும், ஊசலாட்டத்தையுமே வெளிப்படுத்துகிறது.
சேது சமுத்திர திட்டத்தை முடக்க முனைவோருக்கு துணை போகும் நடவடிக்கைதான் இது. மத்திய அரசின் இந்த தவறான நிலைபாட்டை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
மதவாத சக்திகளின் சீர்குலைவு நடவடிக்கைகளுக்கு இடம் தராமல், தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெருமளவு உதவும் வகையில் சேது சமுத்திர திட்டத்தை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள வழித்தடத்திலேயே நிறைவேற்ற வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.