மீண்டும் கொடநாடு செல்கிறார் ஜெயலலிதா-சசியும் போவாரா?
ஆண்டுதோறும் சில வாரங்கள் கொடநாடு எஸ்டேட்டுக்குப் போய் ஓய்வெடுத்து விட்டு வருவது ஜெயலலிதாவின் வழக்கம். அவர் போகும்போதெல்லாம் கூடவே தோழி சசிகலாவும் செல்வது வழக்கம்.
இந்த ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் ஜெயலலிதா கொடநாடு செல்லத் திட்டமிட்டிருந்தார். ஆனால் திடீரென சசிகலா குடும்பத்தினருக்கும், அவருக்கும் பிரச்சினையானதால், தனது பயணத்தை நிறுத்தி வைத்தார். மேலும் சசிகலா குடும்பத்தினரையும் கட்சியிலிருந்து நீக்கினார்.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், 3 மாதங்கள் கழித்து சசிகலாவை மட்டும் மீண்டும் தனது தோழியாக்கிக் கொண்டார். இதையடுத்து வெற்றிப் புன்னகையுடன் சசிகலா, போயஸ் தோட்டத்திற்குத் திரும்பினார்.
இந்த நிலையில் தற்போது கோடைகாலம் வாட்டத்தொடங்கியிருப்பதால், ஜெயலலிதா கொடநாடு செல்லத் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. ஒரு மாதம் வரை அவர் கொடநாட்டில் தங்கியிருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து அவர் அங்கிருந்தபடியே தனது அலுவல்களையும், கட்சிப் பணிகளையும் ஆற்றுவதற்கு வசதியாக, அதற்குத் தேவையான ஏற்பாடுகள் கொடநாடு எஸ்ட்டேடில் தொடங்கி நடந்து வருகிறதாம். தகவல் தொடர்பு வசதிகள், முதல்வருடன் வரும் அதிகாரிகள், அலுவலர்களுக்கான தங்குமிட வசதிகள் உள்ளிட்டவை செய்யப்பட்டு வருகிறதாம். வீடியோ கான்பரன்சிங் வசதியும் செய்யப்படுகிறதாம்.
முதல்வர் கொடநாடு எப்போது செல்வார் என்று தெரியவில்லை. ஆனால் அடுத்த மாதத்தில் அவர் போகலாம் என்று கூறப்படுகிறது. இம்முறையும் அவருடன் சசிகலா செல்வாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.