அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கி ஏமாறாதீர்கள்: விழிப்புணர்வு பிரச்சாரம்
செவ்வாய்கிழமை அட்சய திருதியை நாளாகும். இந்த நாளில் எல்லோரும் தங்கம் வாங்கினால் ஆண்டு முழுவதும் வீட்டில் செல்வம் பெருகும் என மக்களிடம் நம்பிக்கை உள்ளது. இதனை பயன்படுத்தி தரமற்ற தங்க நகைகளை பலரும் விற்பனை செய்வதாக புதுச்சேரியில் நுகர்வோர் அமைப்பினரின் பிரச்சாரம் செய்தனர். புதுச்சேரியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மைக்குகள் மூலமும், துண்டு பிரசுரங்கள் மூலமும் அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
அட்சய திரிதியை நாளைப் பயன்படுத்தி நகைக் கடைக்காரர்கள் நுகர்வோர்களை ஏமாற்றுவதாக நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டினர். அன்றைய தினம் தங்கம் வாங்கும்போது அவர்கள் சுரண்டப்படுகிறார்கள். மக்கள் கூட்டம் கூட்டமாக நகை வாங்க வருவதை பயன்படுத்தி அதிக விலைக்கும், முறையான விற்பனை ரசீது இல்லாமலும் விற்பனை செய்கின்றனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர். கடந்த 4 வருடமாக தங்க நகை விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அட்சய திருதியை நாளில் தங்கநகை வாங்க வலியுறுத்தி பல்வேறு விளம்பரங்கள் செய்யப்படும் நிலையில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.