ஆட்சியரை கடத்த பெண்களை களமிறக்கிய மாவோயிஸ்ட்கள்-தலைமை தாங்கியது கிஷன்ஜி தம்பி
சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் செயல்படும் மாவோயிஸ்டுகள் இக்கடத்தலில் ஈடுபடவில்லை என்று தெரியவந்துள்ளது. தண்டகாருண்ய வனப்பகுதி என்பது ஆந்திரா, ஒரிசா மற்றும் தண்டேவடாவனத்தை உள்ளடக்கியது. இதுதான் மாவோயிஸ்டுகளின் கோட்டைப் பகுதியாகும்.
இந்த கடத்தல் திட்டத்துக்கு மூளையாக இருந்து செயல்பட்டவர் வேணு என்ற வேணுகோபால்ராவ். இவர் கடந்த ஆண்டு மேற்குவங்கத்தில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்டு மூத்த தலைவர் கிஷன்ஜியின் உடன் பிறந்த சகோதரர் ஆவார்.
ஆட்சியர் அலெக்ஸை நீண்டகாலமாக கண்காணித்து இக்கடத்தல் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது. தண்டகாருண்ய கமிட்டியின் தலைவரான கத்ரி சத்யநாராயண ரெட்டியின் தலைமையில் 12 பெண் போராளிகளை உள்ளடக்கிய 15 மாவோயிஸ்டுகள் குழுதான் இக்கடத்தலை நடத்தியுள்ளது.
ஆட்சியர் அலெக்ஸ் நடத்திய கூட்டத்தில் ஆயுதங்களை மறைத்தபடி 12 பெண் போராளிகளும் உட்கார்ந்திருக்கின்றனர். அப்போது அங்கு வந்த மற்ற மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்த துப்பாக்கி முனையில் அலெக்ஸை கூட்டத்தில் மறைந்திருந்த பெண் போராளிகள் மடக்கியுள்ளனர்.
ஒருவேளை ராணுவம் இறக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டால் எதிர்கொள்வதற்காக சுக்மா மாவட்ட மாவோயிஸ்டுகளை எச்சரிக்கையாக இருக்குமாறும் உத்தரவிடப்பட்டிருந்தது.
சுக்மா மாவட்டத்தில் இருந்து அருகில் உள்ள ஒடிசா மாநில வனப்பகுதிக்குள் அலெக்ஸை அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.