கூட்டத்தை செல்போனில் படம் பிடித்ததற்காக அன்னா குழுவில் இருந்த ஒரே முஸ்லிம் தலைவர் நீக்கம்
நொய்டா: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் குழுவில் இருந்த ஒரே முஸ்லிம் தலைவரான முப்தி ஷமீம் காஸ்மி குழுவில் இருந்து நீக்கப்பட்டார்.
அன்னா ஹசாரே குழுவின் உயர் நிலைக்குழு கூட்டம் நேற்று நொய்டாவில் நடந்தது. இதில் அன்னா ஹசாரே, அரவிந்த் கெஜ்ரிவால், சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண், கிரண்பேடி உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அந்த கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது அதை தனது செல்போனில் படம் பிடித்ததாகக் கூறி அந்த குழுவில் இருந்த ஒரே முஸ்லிம் தலைவரான முப்தி ஷமீம் காஸ்மி நீக்கப்பட்டார். ஆனால் தன்னை யாரும் நீக்கவில்லை என்றும் தான் தான் குழுவில் இருந்து வெளியேறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, நான் அன்னா குழுவில் இருந்து வெளியேறிவிட்டேன். இந்த குழுவில் உள்ள கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா ஆகியோர் குழுவை ஏதோ தனியார் நிறுவனம் போன்று தங்கள் இஷ்டத்திற்கு ஆட்டி வைக்கின்றனர்.
அன்னா குழுவின் முக்கிய குழுவில் இருந்த ஒரே முஸ்லிம் உறுப்பினர் நான் தான். தற்போது நானும் வெளியேறிவிட்டேன். அந்த குழுவில் முஸ்லிம்கள் இருப்பதை அவர்கள் விரும்பவில்லை. அது முஸ்லிம்களுக்கு எதிரான இயக்கமாகிவிட்டது.
அந்த இயக்கம் துவங்கிய நாளில் இருந்து நான் அதில் உறுப்பினராக இருந்தேன். அன்னா நல்ல மனிதர். ஆனால் கெஜ்ரிவால், சிசோடியா தான் அவரை தங்கள் சொந்த நலனுக்காக பயன்படுத்தி வருகிறார்கள் என்றார்.
காஸ்மி விவகாரம் குறித்து அன்னா குழு உறுப்பினரான குமார் விஷ்வாஸ் கூறுகையில்,
கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது காஸ்மி அதை தனது செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்ததை உறுப்பினர் ஒருவர் பார்த்துவிட்டார். உடனே அவரது செல்போனை வாங்கிப் பார்த்தில் அதி்ல 3 பதிவு செய்யப்பட்ட காட்சிகள் இருந்தது. இது குறித்து விளக்கம் அளிக்குமாறு கேட்டதற்கு அவர் கூட்டத்தைவிட்டு வெளியேறிவிட்டார் என்றார்.
பிரசாந்த் பூஷண் கூறுகையில்,
கூட்டம் நடந்து கொண்டிருக்கையில் வெளியே செல்லும் பழக்கம் உள்ளவர் காஸ்மி. தற்போது செல்போனுடன் மாட்டியவுடன் தனக்கு எப்படி பதிவு செய்வது என்றே தெரியாது என்றும், அது எதேச்சையாக பதிவாகியதாகவும் தெரிவித்தார். தப்பு செய்தால் அதை ஒப்பக்கொள்ள வேண்டியது தானே என்றார்.
அன்னாவும், யோகா குரு பாபா ராம்தேவும் கடந்த 20ம் தேதி கூட்டாக செய்தியாளர்களை சநத்தித்தார்கள். வரும் ஜூன் மாதம் 3ம் தேதி இருவரும் கூட்டாக ஊழலை எதிர்த்து டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார்கள். அன்னா ராம்தேவுடன் கைகோர்த்திருப்பது குழு உறுப்பினர்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.