அரசியல் சார்பற்றவரே அடுத்த ஜனாதிபதியாக வேண்டும்: சரத் பவார்
மும்பை: நாட்டின் அடுத்த ஜனாதிபதி அரசியல் சார்பற்றவராக இருக்க வேண்டும் என்று மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் கூறியுள்ளார்,
ஜனாதிபதி பிரதீபா பட்டீலின் பதவி காலம் வருகிற ஜுலை மாதம் முடிகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியைத் தேர்வு தெய்ய விரைவில் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு போதிய பலம் இல்லாததால் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாத நிலையில் உள்ளது.
புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்த இரண்டு அணிகளிலும் இடம் பெறாத மற்ற கட்சிகளின் ஆதரவு மிக மிக முக்கியம்.
இதனால் இந்த ஜனாதிபதி தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி, அப்துல் கலாமை மீண்டும் ஜனாதிபதியாக்க ஆர்வம் காட்டுகிறது. இதற்கு மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான பானர்ஜியும் ஆதரவு தெரிவித்து இருக்கிறார். இவர்களது நிலைக்கு பாஜகவும், அதிமுகவும் கூட ஆதரவு தர வாய்ப்புள்ளது.
ஆனால், சோனி காந்தி பிரதமராவதைத் தடுத்ததால் கலாம் மீது கடுப்பில் இருக்கும் காங்கிரஸ் அவரை மீண்டும் ஜனாதிபதியாக்கத் தயாராக இல்லை.
அதே நேரத்தில் ஜனாதிபதி வேட்பாளருக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதன் மூத்த தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகருமான பி.ஏ.சங்மாவின் பெயரை அக்கட்சியின் தலைவர் சரத் பவார் பரிந்துரைத்துள்ளதாகத் தெரிகிறது.
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய பவார், சங்மா பெயரை பரந்துரை செய்திருப்பதாக கூறப்படும் தகவல்களை மறுத்தார். அவர் கூறுகையில், அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை முடிவு செய்வதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போதுமான எண்ணிக்கை பலம் இல்லை. இந்த சூழ்நிலையில் நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக அரசியல் சார்பு இல்லாத ஒருவரை தேர்வு செய்வதே சிறந்ததாக இருக்கும்.
எங்களது கட்சியில் 16 எம்.பிக்கள் மட்டுமே உள்ளனர். இதனால் எங்களது எல்லை எங்களுக்கு தெரியும். அரசியல் பின்னணி இல்லாத ஒருமித்த வேட்பாளரை கண்டறிவது குறித்து அனைத்து அரசியல் கட்சிகளும் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்றார்.
காந்தியடிகளின் பேரன்:
இந் நிலையில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தவிர, காந்தியடிகளின் பேரன் கோபால கிருஷ்ண காந்தியின் பெயரும் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர்கள் பெயர்களாக அடிபடுகின்றன.