எய்ட்ஸ் கைதிகள், திகார் சிறை வார்டன் துன்புறுத்துகிறார்கள்: பெண் கைதி புகார்
டெல்லி: திகார் சிறையில் இருக்கும் தன்னிடம் இருந்து பணம் பெறுவதற்காக எய்ட்ஸ் நோயாளிகளுடன் சேர்ந்து சிறை வார்டன் கொடுமைப்படுத்துவதாக பெண் கைதி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் போலி பாஸ்போர்ட், விசாக்கள் வழங்கி மோசடி செய்ததாக சச்சின் சர்மா, ஹர்ஷத் ஆலம், புபேந்தர், அமன் ஆலம், ஹனி சர்மா ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதில் ஹனி சர்மாவைத் தவிர மீதமுள்ள 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடந்த 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். ஆனால் ஹனி கடந்த ஜனவரி மாதம் தான் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் அவரது 2 வயது மகளும் சிறையில் இருக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 11 வழக்குகளை சந்தித்து வரும் ஹனி சர்மா டெல்லி நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
என்னிடம் இருந்து பணம் பெறுவதற்காக தலைமை வார்டனும், வார்டனும் என்னை துன்புறுத்துகின்றனர். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள பெண் கைதிகளைவி்ட்டு அவர்களின் நகத்தால் என்னை கீறச் செய்கின்றனர். மேலும் எனது 2 வயது மகளையும் வார்டன் கொடுமைப்படுத்துகிறார். துணை சூப்பிரண்டு மற்றும் சிறை ஊழியர்கள் முன்னிலையில் என்னை 1 மணி நேரமாக அடித்து துன்புறுத்தினர்.
இதில் காயமைடந்த என்னை எனது செலவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும். திருப்பி சிறைக்கு அனுப்பக் கூடாது என்று அவர் அதில் தெரிவி்த்திருந்தார்.
அவரது மனுவை விசாரித்த நீதிபதி வினோத் யாதவ் அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் இது குறித்கு விளக்கம் அளிக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.