யாழ்ப்பாணம் மக்களை ஆளவில்லை, உதவி தான் செய்கிறோம்: ராணுவம்
கொழும்பு: யாழ்ப்பாணத்தில் வாழும் மக்களுக்கு ராணவம் உதவி செய்கிறதே தவிர அவர்கள் ஆட்சி செய்யவில்லை என்று அந்த பகுதிக்கான ராணுவ தளபதி மகிந்தா ஹத்துருசிங்கே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போர் முடிந்து 3 ஆண்டுகள் ஆகியும் அங்குள்ள மக்கள் குறிப்பாக தமிழர்கள் அந்நாட்டு ராணுவத்தின் ஆதிக்கத்தில் தான் உள்ளனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. மேலும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் ராணுவத்தினர் அடிக்கடி மக்களை தாக்கி வருவதாகவும், அங்குள்ள தமிழர்கள் ராணுவத்தினரைக் கண்டாலே அஞ்சுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
இந்நிலையில் ராணுவத்தினர் மக்களுக்கு உதவ தான் செய்கிறார்களே தவிர அவர்களை ஆட்சி செய்யவி்ல்லை என்று யாழ்ப்பாணம் பகுதிக்கான ராணுவ தளபதி மகிந்தா ஹத்துருசிங்கே தெரிவித்துள்ளார்.
இதய நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி கஜேந்தினிக்கு ராணுவ உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் குணமாகி யாழ்ப்பாணத்திற்கு வந்தபோது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஹத்துருசிங்கே, ராணுவத்தினர் மக்களுக்கு உதவி செய்கிறார்கள். அவர்களை ஆட்சி செய்யவில்லை. நாங்கள் மக்களுக்கு உதவுகிறோம் என்பதற்கு இதுவே சாட்சி என்றார்.