நாத்திகரான மாமனாருக்கு கடவுள் நம்பிக்கை வர வைத்த கலெக்டர் கடத்தல்!
வேணுகோபால் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். தலைமைப் பொறியாளராகப் பணியாற்றியவர். சமீபத்தில்தான் ஓய்வு பெற்றார். மருமகன் கடத்தப்பட்டது குறித்து அவர் கூறுகையில்,
நான் தந்தை பெரியார் மீது தீவிர பற்று உள்ளவன். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. எனது மருமகனை கடத்திய தகவல் கிடைத்தவுடன், முதல் முறையாக எனது குலதெய்வத்தை வேண்டினேன். அடுத்து எனது தாய்-தந்தையை வேண்டி வணங்கினேன்.
எனது மருமகனை மீட்க மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவோயிஸ்டுகள் எனது மருமகனை நல்லபடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்.
எனது குடும்பத்தினர் அனைவரும் என்ஜினீயர்கள். நாங்கள் யாருக்கும் கெடுதல் செய்யவில்லை. கண்டிப்பாக நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம் என்றார்.
கையில் தனது மகளின் திருமண ஆல்பத்தை வைத்துக் கொண்டு புரட்டியபடியே வேதனையை அடக்கியபடி காணப்பட்டார் வேணுகோபால்.
வேணுகோபாலின் மனைவி ஆனந்தி கூறுகையில்,
நான், எனது கணவர், மகன் 3 பேரும் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தோம். அப்போது டெலிபோன் மணி ஒலித்தது. நான் போனை எடுத்து பேசினேன். எதிர் லைனில் எனது மகள் பேசினாள். எடுத்த எடுப்பிலேயே, அம்மா, அவரை தீவிரவாதிகள் கடத்தி விட்டார்கள் என்று அழுதபடியே சொன்னாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏண்டி நீ விளையாட்டாக சொல்றீயா, உண்மையிலேயே சொல்றீயா? என்று நான் கேட்டேன். அப்போது போன் கட்டாகி விட்டது. பிறகு மீண்டும் பேசியபோதுதான் உண்மை என்று தெரிய வந்து துடித்துப் போய் விட்டேன் என்றார்.
அலெக்ஸ் பால் மேனனை மீட்க மத்திய அரசை வலியுறுத்திடக் கோரி முதல்வர் ஜெயலலிதாவை அவரது குடும்பத்தினர் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.