வருது..வருது.. மே 4ம் தேதி முதல் 'அக்னி நட்சத்திரம்' வருது...
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளாகவே பருவ மழை சரியாக பெய்யவில்லை. இந்த ஆண்டு இரண்டு மாவட்டங்களிலும் கோடை வெயில் கொடுமையை மக்கள் உச்சமாக அனுபவித்து வருகின்றனர். காலை 8 மணிக்கே சூரியன் தனது உக்கிரத்தை காட்டத் தொடங்கி விடுகிறது. பகல் வேளையில் சாலையில் நடந்து செல்வதே கடினம் என்ற நிலைதான் உள்ளது.
பிற்பகலில் கிராமங்களில் அடிக்கும் ஊமை வெயில் புழுக்கத்தை அதிகரித்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் எப்போதுமே ஏப்ரல், மே மாதங்களில் தான் 100 டிகிரி தாண்டி வெயில் அடிப்பதுண்டு. இவ்வாண்டு அக்னி நட்சத்திரம் மே 4ல் துவங்க உள்ள நிலையில் அதற்கு முன்பே பொதுமக்களை வெயில் வாடடி வதைக்கிறது. நெல்லையில் நேற்று 101 டிகிரி வெயில் பதிவானது. வெயில் தாங்காமல் இருமாவட்ட நிலங்களும் கந்தக பூமியாகக் காட்சியளிக்கின்றன.
நெல்லை, தூத்துக்குடியில் குடிநீர் தட்டுபாடு என்பது கோடைக்கால பாதிப்புகளில் முக்கிய ஒன்றாகும். ஆற்று நீர் இணைப்பு பெற்ற கிராமங்களுக்கு வாரம் ஒருமுறை தண்ணீர் கிடைப்பதே அரிதாக உள்ளது. அக்னி வெயிலை எப்படி சமாளிக்கப் போகிறமோ என்ற கவலை வெயிலைவிட வாட்டி வதைக்கிறது.