ஏழைகளுக்கான திட்டத்தை தொடங்கி வைத்த எனது கணவரை கடத்தியது என்ன நியாயம்?-மேனன் மனைவி
தற்போது கர்ப்பிணியாக உள்ள ஆஷா மேனன், தனது கணவரின் கடத்தலால் அதிர்ச்சி அடைந்துள்ள போதிலும், திடமாக இருப்பதாக கூறப்படுகிறது. தனது கணவர் கடத்தல் விவகாரம் குறித்து அவர் கூறுகையில், எங்களது குடும்பத்தினர் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுடன் பேசியுள்ளனர். எந்தவித அபாயமும் இல்லாமல் எனது கணவர் மீட்கப்படுவார் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
மத்திய அரசு அனைத்து சாதகமான உதவிகளையும் அளிக்கும் என்றும் மத்திய அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. கடத்தல்காரர்கள் எனது கணவரை எதுவும் செய்து விடக் கூடாது என்று நான் வேண்டுகோள் விடுத்துக் கொள்கிறேன்.
நூற்றுக்கணக்கான ஏழை விவசாயிகளுக்கு பலன் அளிக்கக் கூடிய அரசின் திட்டம் ஒன்றைத் தொடங்கி வைப்பதற்காக சென்றபோதுதான் எனது கணவரை கடத்தியுள்ளனர். ஏழைகளுக்காக போராடுவதாக கூறிக் கொள்ளும் சிலர், ஏன் இப்படி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற எனது கணவரை கடத்த வேண்டும். ஏழைகளுக்கு உதவும் திட்டத்தை தொடங்கி வைக்கத்தானே அவர் சென்றார். கடத்தல்காரர்களின் செயலில் நியாயமில்லை என்றார் ஆஷா.
விடுதலை செய்யுங்கள்-ஆஷா மீண்டும் கோரிக்கை:
இந் நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் கடத்தப்பட்டுள்ள தமது கணவரை மாவோயிஸ்டுகள் விரைவாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஆஷா மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுக்மாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுக்மா மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டதால்தான் அவரை இலக்கு வைத்து மாவோயிஸ்டுகள் கடத்தியுள்ளனர் என்றார்.
மேலும், தமது கணவர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர் என்பதால் தொடர்ந்து மாத்திரைகளை உட்கொண்டுவந்தார். கடத்தப்பட்ட நிலையில் அவர் மாத்திரைகளை சாப்பிட்டிருக்க வாய்ப்பில்லை. அதனால் அவரது உடல்நிலை பற்றி மிகவும் கவலைப்படுகிறேன் என்றார்.
தமது கணவரை மீட்பதற்கான நடவடிக்கைகளை சத்தீஸ்கர் மாநில அரசு மெற்கொண்டு வருவதாகக் கூறிய ஆஷா, அலெக்ஸ் பால் மேனனின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றார்.