தேமுதிக எம்.எல்.ஏக்கள் மனு மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்கு போடுவேன்: விஜயகாந்த்
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக வெற்றிபெற்ற தொகுதிகளுக்கு நேரடியாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டு கோரிக்கை மனுக்களை விஜயகாந்த் பெற்று வருகிறார்.
இந்த வகையில் மேட்டூர் தொகுதி மக்களிடம் அவர் நேற்று கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தேமுதிக வென்ற தொகுதிகளில் 2 சட்டமன்ற தொகுதிகளை முடித்துவிட்டு 3-வதாக மேட்டூருக்கு வந்துள்ளேன். மேட்டூர் எம்.எல்.ஏ.விடம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்களை பொதுமக்கள் கொடுத்துள்ளனர்.
அவர் அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி விட்டார். இருந்த போதிலும் இவற்றின் மீது அரசு அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையையும் எடுக்காதது ஏன்?. நாங்கள் கொடுக்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்வோம் என்றார் அவர்.
இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.
இந்த குறைகேட்பு கூட்டத்தில் ஒரு பெண்ணுக்கு தையல் எந்திரத்தை வழங்கினார். இதையடுத்து குடிநீர் பற்றாக்குறை நிலவும் பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கும் பணியையும் விஜயகாந்த் தொடங்கி வைத்தார்.