சென்னை கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க இளைஞர்கள் பிரச்சாரம்
சென்னையில் உள்ள பல கடைகளுக்கு, வணிக நிறுவனங்களுக்கு, கல்வி நிறுவனகளுக்கு தமிழ் பெயர் பலகைகள் இல்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இதை குறித்து வணிகர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழர் பண்பாட்டு நடுவம் களத்தில் இறங்கியது.
பண்பாடு நடுவத்தின் செய்திக்குறிப்பு:
முதல் கட்டமாக சென்னை எழும்பூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் எந்தெந்த கடைகளில் தமிழ் பெயர் இல்லை என்பதை ஆய்வு செய்து அந்த கடை உரிமையாளர்களை சந்தித்து சென்னை மாநகராட்சியின் 2010ம் ஆண்டு கட்டாய தமிழ் மொழி பலகை வைக்க வேண்டும் என்ற ஆணையை காட்டினோம். இந்த ஆணைப்படி பெயர் பலகைகள் தமிழ் மொழியில் இருக்க வேண்டும் என்று கடைக்காரர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.
வணிகர்களும் தங்கள் தவறை உணர்ந்து தங்கள் கடைகளுக்கு தமிழ் பெயர் பலகை வைக்கிறோம் என்ற வாக்குறுதி கொடுத்தனர். மேலும் அறிக்கையை பெற்றுக் கொண்டதற்கு சாட்சியாக படிவத்தில் கையெழுத்தும் போட்டுக் கொடுத்தனர். மேலும் தமிழ் பெயரிடாத கடைகளை பற்றிய விவிரங்களை சென்னை மாநகராட்சி ஆணையர், மேயர் ஆகியோருக்கு தமிழர் பண்பாட்டு நடுவம் அனுப்ப உள்ளது. மீண்டும் சென்னையில் வணிகர்களுக்கு ஒரு அரசு அறிக்கை வெளி வந்தால் தான் ஆயிரக்கணக்கான வணிக நிறுவனங்கள் தமிழ் மொழியில் பெயர் பலகைகள் வைப்பார்கள். அதற்கும் தமிழர் பண்பாட்டு நடுவம் தமிழக அரசிடம் வேண்டுகோள் வைத்துள்ளது.
கடைகள், வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைப்பது கட்டாயம்- சென்னை மாநராட்சி
2010ம் ஆண்டு சென்னை மாநகராட்சி வெளியிட்ட ஆணை:
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் தமிழில் பெயர் பலகை வைத்திருக்க வேண்டும். சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள வணிக நிறுவனங்களின் பெரும்பாலான கடைகளில் தமிழ் பெயர் பலகைகள் முழுமையாக இல்லை.
ஆந்திரா, கேரளா, கர்நாடக போன்ற பிற மாநிலங்களில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் பிற மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தமிழுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் தமிழக முதல்வரால் உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்பட இருக்கிறது. எனவே மே மாத இறுத்திக்குள் அனைத்து கடைகளிலும் பெயர் பலகைகளில் தமிழ் எழுத்து பிரதானமாக இருக்க வேண்டும். ஏர்டெல், நோக்கியா போன்ற நிறுவனங்களின் பெயர்களும் தமிழிலேயே எழுதப்பட வேண்டும். மே மாதம் 31ம் தேதிக்குள் கடைகளில் உள்ள பெயர் பலகைகளில் தமிழ் எழுத்து பிரதானமாக இடம் பெறாவிட்டால், ஜூன் மாதம் 1ம் தேதி முதல் தமிழ் பெயர் பிரதானமாக வைக்காத கடைகளின் பெயர் பலகைகளை சென்னை மாநகராட்சி அகற்றும். இதற்கு கால அவகாசம் யாரும் கேட்கக் கூடாது.
பெயர் பலகைகளில் தமிழ் எழுத்துகள் பிரதானமாக இடம் பெறுவதற்கு அனைத்து வணிக சங்கங்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில் அனைத்து வணிகர் சங்கங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வணிக பெருமக்கள் கலந்துகொண்டு சென்னை மாநகராட்சி அறிவித்துள்ள வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தமிழ் பிரதானமாக இடம்பெற வேண்டும் என்ற திட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். இது சென்னை மாநகராட்சிக்கு கிடைத்த மிக பெரிய வெற்றியாகும்.
இந்த அறிக்கையின்படி இப்போது தமிழர் பண்பாட்டு நடுவம் சென்னையில் தமிழில் பெயர் பலகைகள் இல்லாத கடைகள் மற்றும் நிறுவனங்களை தமிழில் பெயர் பலகை வைக்குமாறு கோரிக்கை விடுத்து வருகிறது. அவ்வாறு தமிழில் பெயர் பலகை வைக்க மறுக்கும் கடைகளின் பலகைகளை மாநகராட்சியின் ஒத்துழைப்போடு விரைவில் அகற்ற தமிழர் பண்பாட்டு நடுவம் ஆவண செய்யும் என தெரிவித்துக் கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.