ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை விண்ணில் பாயும் ரிசாட்-1 செயற்கைக்கோள்
சென்னை: எந்த நேரத்திலும் மழை, பனி, மேகம் மற்றும் புயலிலும் கூட துல்லியமாகப் படம் பிடிக்கும் திறன் கொண்ட ரிசாட்-1 செயற்கைக்கோள் நாளை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது.
அதிநவீன ரேடார் இமேஜிங் தொழில்நுட்பத்துடன் கூடிய ரிசாட் 1 செயற்கைக்கோளை இஸ்ரோ தயாரித்துள்ளது. இந்த செயற்கைக்கோளை வடிமைக்க ரூ.378 கோடியும், அதனை தாங்கிச் செல்லும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை தயாரிக்க ரூ.120 கோடியும் செலவாகியுள்ளது. 858 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி.சி-19 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது.
இந்த செயற்கைக்கோள் நாளை காலை 5.47 மணிக்கு ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்தில் ராக்கெட் ஏவப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவி்த்தனர். தற்போது பனிக்காலங்களில் பூமியைத் தெளிவாக படங்கள் எடுக்க வேண்டுமானால் நாம் கனடா நாட்டின் செயற்கைக்கோளையே நம்பி இருக்க வேண்டியுள்ளது.
தற்போது தயாரிக்கப்பட்டுள்ள ரிசாட்-1 எந்த நேரத்திலும் மழை, பனி, மேகம் மற்றும் புயலிலும் பூமியை மிகத் துல்லியமாகப் படம் பிடிக்கும் திறன் கொண்டது.
ரிசாட்-1 செயற்கைக்கோளை சுமந்து செல்லும் பி.எஸ்.எல்.வி.19 ராக்கெட் 44.5 மீட்டர் உயரம் மற்றும் 312 டன் எடை கொண்டது. பி.எஸ்.எல்.வி. எக்ஸ்டரா லார்ஜ் ராக்கெட் ஏற்கனவே சந்திராயன்-1 மற்றும் ஜிசாட்-12 ஆகிய செயற்கைக்கோள்களை தாங்கிச் சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரிசாட்-1ஐ விண்ணில் ஏவுவதற்கான 71 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று காலை 6.47 மணிக்கு துவங்கியது.