இலங்கை விவகாரத்தில் மத்திய அரசின் அணுகுமுறை சரி தான்: மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன்
விழுப்புரம்: இலங்கை பிரச்சனையை பொறுத்தவரை மத்திய அரசு சரியான அணுகுமுறையை கையாண்டு வருகிறது என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவராஜ் இல்ல திருமண விழாவில் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கூடங்குளம் அணு மின் நிலையம் இன்னும் 40 நாட்களில் திறக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் தொடர் முயற்சி, மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் தான் அணு மின் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக மக்களுக்கு விரைவில் மின்வெட்டில் இருந்து விடுதலை கிடைக்கும்.
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. அதனையடுத்து ஈழத்தமிழர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான எம்.பி.க்கள் குழுவை மத்திய அரசு இலங்கைக்கு அனுப்பி வைத்தது. இந்த பயணம் அங்குள்ள தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் கொடுக்கும்.
இலங்கை பிரச்சனையை பொறுத்தவரை மத்திய அரசு சரியான அணுகுமுறையை கையாண்டு வருகின்றது. இலங்கை சென்று திரும்பிய குழு அளி்க்கும் அறிக்கையை வைத்து பிரச்சனைகளுக்கு முழுமையாக தீர்வு கண்டு, தமிழர்களின் வாழ்வாதாரம் மேம்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.
திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் இலங்கை சென்ற குழுவில் இடம்பெறாதது வருந்தத்தக்கது என்றார்.