நியூயார்க்: அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்த இந்திய மாணவர் தான் தங்கியிருந்த வீட்டில் பிணமாகக் கிடந்தார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் நிகில் கர்ணம். அமெரிக்காவின் டல்லாஸ் மாகாணத்தில் படித்து வந்தார். அவர் அங்கு ஒரு வீடு எடுத்து தனியாகத் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் நிகிலின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் இது குறி்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது நிகில் பிணமாகக் கிடந்தார். அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் அதை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து நிகிலின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று கடந்த 19ம் தேதி பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய மாணவர் சோஷாத்ரி ராவ்(24) சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தகக்து. ஆந்திராவைச் சேர்ந்த அவரின் பெற்றோர், சகோதரர்கள் ஒரிசாவில் வசித்து வருகிறார்கள்.





















