புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்கு தடை
சென்னை: புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கின் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் புதுவை நீதிபதியுடன் காஞ்சி சங்கராச்சாரி பேரம் பேசும் சிடி வெளியான விவகாரத்தால் புதுச்சேரியில் நடைபெற்று வந்த விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
புதுவை நீதிபதி மாற்றப்பட்ட நிலையில் மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற்றது. காஞ்சி சங்கராச்சாரி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தம்மையும் தமது மகனையும் மீண்டும் விசாரணை செய்யக் கோரி புதிய மனு ஒன்றை சங்கரராமன் மனைவி பத்மா புதுச்சேரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இதேபோல் தமது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
மேலும் தாம் செய்துள்ள இந்த மனுக்கள் மீது தீர்ப்பு வரும் வரை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவையும் பத்மா மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கின் விசாரணைக்கு இன்று இடைக்காலத் தடை விதித்தது. மேலும் பத்மா குடும்பத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.