குறைந்தது 1 லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வென்றாக வேண்டும்-ஓ.பன்னீர்செல்வம்
புதுக்கோட்டை இடைத்தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம், புதுக்கோட்டை பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடந்தது. அதில் பெரும்பாலான அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில்,
புதுக்கோட்டை அதிமுக கோட்டை என்பது, ஏற்கனவே பலமுறை நடந்துள்ள தேர்தல்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. வரும் இடைத்தேர்தலில், புதுக்கோட்டை யாராலும் அசைக்க முடியாத அதிமுகவின் எக்கு கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும்.
சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக 94 ஆயிரத்து 977 ஓட்டுகள் பெற்றது. வெற்றி வித்தியாசம், 68 ஆயிரத்து 757 ஓட்டுகள் தான். புதுக்கோட்டை தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை, இரண்டு லட்சத்தைவிட குறைவு என்பதால், ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஓட்டுகள் வரை பதிவாக வாய்ப்பு உள்ளது. ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில், அதிமுக வேட்பாளர் வெற்றி பெற வேண்டும்.
புதுக்கோட்டை அதிமுகவினரிடையே எந்த விருப்பு, வெறுப்பும் இல்லை. எனவே, இந்த வெற்றி இலக்கை எட்டுவது சுலபம் என்பதால், அனைவரும் பம்பரம் போல் சுழன்று தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றார் ஓ.பி.எஸ்.