காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: கிராமங்களில் பாதியாக குறைந்த மின்வெட்டு!
தமிழகத்தில் தினமும் 12,000 முதல் 12,800 மெகாவாட் வரை மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் அந்த அளவு மின் உற்பத்தி இல்லாததாலும், பொது மின்பாதை மூலம் வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்க முடியாததாலும் தமிழகத்தில் தினமும் 3,000 முதல் 4,000 மெகாவாட் மின் தட்டுப்பாடு உள்ளது.
இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் மின்வெட்டு ஏற்படுகிறது. தமிழகத்தில் 6,696 மெகாவாட் மின் உற்பத்தி் திறன் கொண்ட காற்றாலைகள் அமைக்கப்பட்டும் சரியாக காற்று வீசாததால் அவற்றில் இருந்து போதிய மின்சாரம் கிடைக்கவில்லை. காற்றாலைகள் மூலம் சராசரியாக தினமும் 2,000 முதல் 2,500 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக காற்று வீசத் தொடங்கியுள்ளதால் தினமும் 800 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைக்கிறது.
மேலும் தென்மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்துள்ளதால் மின் தேவை குறைந்துள்ளது. தற்போது காற்றாலைகள் மூல் கூடுதல் மின்சாரம் கிடைப்பதையடுத்து கிராமப்புறங்களில் 10 மணி நேரமாக இருந்த மின்வெட்டு தற்போது 5 மணி நேரமாகக் குறைந்துள்ளது. சென்னையில் 2 மணி நேரமும், நகரங்களில் 4 மணிநேரமும் மின் வெட்டு ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர இரவு நேரத்தில் இனி மின்வெட்டு ஏற்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காற்றாலை மின் உற்பத்தி மேலும் அதிகரி்ககும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அதிகரித்தால் கிராமப்புறங்களில் மின்வெட்டு நேரம் மேலும் குறையும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.