உ.பியில் காங். மண்ணைக் கவ்வ மூத்த தலைவர்களின் வாய்சவடாலே காரணம்: அந்தோணி கமிட்டி அறிக்கை
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைய பிரச்சாரத்தின் போது மூத்த தலைவர்கள் தங்கள் இஷ்டத்துக்க் நினைத்ததையெல்லாம் பேசியதுதான் என்று குற்றம்சாட்டியுள்ளது ஏ.கே.அந்தோணி தலைமையிலான கமிட்டி.
உத்தரப்பிரதேசத்தில் படுதோல்வியைச் சந்தித்த காங்கிரஸ் கட்சி, தோல்விக்கான காரணங்களை ஆராய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தலைமையிலான ஒரு கமிட்டியை அமைத்தது. இதில் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், மத்திய அமைச்சர் சுசீல்குமார் ஷிண்டே ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். கோவா, பஞ்சாப், உத்தர்காண்ட் மாநில தோல்விகளுக்குமான காரணத்தையும் அந்தோணி கமிட்டி ஆராய உத்தரவிடப்பட்டிருந்தது.
உ.பி.யில் ராகுல்காந்தியின் தொடர்ச்சியான பிரச்சாரத்தினால் கட்சிக்கு கணிசமான இடங்கள் கிடைக்கும் என்ற காங்கிரஸின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது ஏன்? என்பது குறித்து அந்தோணி கமிட்டி ஆராய்ந்தது. இக்கமிட்டியின் அறிக்கை இறுதி செய்யப்பட்டு காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் கொடுக்கப்பட உள்ளது.
அந்தோணி கமிட்டி அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில அம்சங்கள் கசிந்துள்ளன. தோல்விக்கு பொறுப்பேற்பதாகக் கூறியிருந்த ராகுல் காந்தி மீது எந்த புகாரையும் அந்தோணி கமிட்டிமுன்வைக்கவில்லை.
அந்தோணி கமிட்டி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள்
1. காங்கிரஸ் கட்சியின் ஊழல் குற்றச்சாட்டுகளை பொதுமேடைகளில் எதிர்க்கட்சிகள் பட்டியலிட்டது
2- எந்த ஒரு செல்வாக்கும் இல்லாதவர்களுக்கு தெர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது
3. சர்ச்சைகள் ஓயாத வகையில் மூத்த தலைவர்கள் பொறுப்பற்ற முறையில் தொடர்ந்து பேசிவந்தது
4. காங்கிரஸ் கட்சியின் அடிப்படை கட்சி அமைப்புகள் வலுவில்லாமல் இருந்தது
ஆகியவையே காங்கிரஸின் தோல்விக்குக் காரணங்களாக அந்தோணி கமிட்டி முன்வைத்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் மத்திய சட்ட அமைச்சரான சல்மான் குர்ஷித் தமது மனைவி போட்டியிட்ட தொகுதியில் பிரச்சாரத்தின் போது, முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீடு குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தேர்தல் ஆணையம் எச்சரித்த பிறகும் அப்படித்தான் பேசுவேன் என்று கூற அது குடியரசுத் தலைவர் வரை சென்றது என்பது குறிப்ப்பிடத்தக்கது.,