முன்னாள் குடியரசுத் தலைவர்களுக்கான சலுகைகளை தங்களுக்கு வழங்க முன்னாள் சபாநாயகர்கள் கோரிக்கை
பி.ஏ.சங்மாவும் சோம்நாத் சட்டர்ஜியும் அண்மையில் சபாநாயகர் மீராகுமாருக்கு எழுதிய கடிதம் ஒன்றில், முன்னாள் குடியரசுத் தலைவர்கள், துணை குடியரசுத் தலைவர்களுக்கு வழங்கப்படுவதைப் போல டெல்லியில் இலவச வீடு, போக்குவரத்து போன்ற வசதிகளை தங்களுக்கும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
முன்னாள் சபாநாயர்களின் இந்த கோரிக்கையானது நாடாளுமன்ற விவகாரக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால், இத்தகைய கோரிக்கை வந்துள்ளதும் உண்மை.. நாடாளுமன்ற விவகாரக் குழுவின் பரிசீலனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதும் உண்மை என்றார். அதே நேரத்தில் முன்னாள் சபாநாயர்களை முன்னாள் குடிய்ரசுத் தலைவர்கள் மற்றும் முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர்களுக்கு சமமாகக் கருத முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் குடியரசுத் தலைவர்கள், முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர்களுக்கான சலுகைகளை தமது பதவிக்காலத்தை முழுமையாக முடிவு செய்த முன்னாள் சபாநாயகர்களுக்கு மட்டுமே வழங்கலாம் என்றும் ஒரு கருத்து அரசுத் தரப்பில் உள்ளது. இதுபற்றி விரைவில் ஒரு முடிவு வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.